அப்போ மாண்டஸ் புயல்.. இப்போ மிக்ஜாம்.. சென்னை மெரினா மாற்றுத்திறனாளிக்கான மரப்பாதை அகற்றம்
சென்னை: மிக்ஜாம் புயலை கருத்தில் கொண்டு சென்னை மெரினாவில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை அகற்றப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கும் கடல் அலைகளை ரசிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அவர்களால் வீல் சேர்களில் மணலில் வர முடியாது. இதனால் மாற்றுத்திறனாளி குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுவர்.

அவர்களின் வயது ஒத்த குழந்தைகள் கடற்கரையில் ஆடி , ஓடி விளையாடும் போது நம்மால் செல்ல முடியவில்லையே என்ற ஏக்கம் இருக்கும். இந்த மனக்குறையை போக்குவதற்காக சென்னை மெரினா கடல் அலையை மாற்றுத்திறனாளிகளும் ரசிக்கும் வகையில் ரூ 1.14 கோடி செலவில் மரப்பலகையால் ஆன நடைபாதை அமைக்கப்பட்டது.
மெரினாவில் செல்பி பாயிண்ட் பின் பகுதியில் உள்ள மணல் பரப்பில் 1,246 அடி நீளத்திலும் 10 அடி அகலத்திலும் நடைபாதை அமைக்கப்பட்டு கடந்த ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்த நடைபாதையில் பல மாற்றுத்திறனாளிகள் வீல் சேரில் சென்று கடல் அன்னையின் அன்பில் நனைந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வந்த மாண்டஸ் புயலின் போது அந்த மரப்பலகையானது இரண்டாக உடைந்துவிட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை முழுவதுமாக சேதமடையவில்லை. கடலுக்கு சென்று பார்வையிடும் பகுதியில்தான் சேதமடைந்துவிட்டது. கடல் அரிப்பு காரணமாக அந்த பலகை இரண்டாக உடைந்துவிட்டது. இது பல்வேறு விமர்சனங்களுக்குள்ளான நிலையில் அந்த நடைபாதையை சரி செய்யும் பணிகள் நிடந்து முடிந்து மீண்டும் மரப்பாதை செயல்பாட்டுக்கு வந்தது. இந்த நிலையில் தற்போது மிக்ஜாம் புயல் வடதமிழகத்தின் வழியாக ஆந்திரா நோக்கி செல்கிறது.
இதனால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள்தான் இந்த புயல் கரையை கடக்கிறது. இதனால் மணிக்கு 75 கி.மீ. வேகத்திற்கு காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மெரினாவில் உள்ள நடைபாதை அகற்றப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications