பேய்க்காற்று வீசப்போகுது.. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று அலர்ட் விடுத்த வானிலை மையம்!
சென்னை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிக பலத்த தரைக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டிட்வா புயலால் அதிகபட்சமாக 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தின் வட மாவட்டங்களை நெருங்கும் டிட்வா (Ditwah) புயல், இன்று மாலையில் வலுவிழக்கத் துவங்கும் என்றும், கரையை கடக்க வாய்ப்பு இல்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிட்வா புயல் இன்று மாலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க வாய்ப்புள்ளது.

டிட்வா புயல்
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய வட தமிழக - புதுச்சேரி
கடற்பகுதிகளில் பகுதிகளில் நிலவிய 'டிட்வா' புயல், வேதாரண்யத்துக்கு வடகிழக்கே 120 கி.மீ. தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு-வடகிழக்கே 90 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 130 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 220 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
டிட்வா புயல், அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம்-புதுச்சேரி கடற்கரைக்கு இணையாக கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. இந்தப் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடலில் தமிழக-புதுச்சேரி கடற்கரையை 70 கி.மீ. முதல் 30 கி.மீ. வரையிலான தொலைவில் இன்று (நவ. 30) மாலைக்குள் நெருங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட்
டிட்வா புயல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (நவ. 30) வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக திருவள்ளூர், ராணிப்பேட்டையில் அதிகன மழைக்கு (210 மி.மீ.க்கும் அதிகமாக) வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்ச் அலர்ட்
மேலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையும், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மிக பலத்த காற்று - எச்சரிக்கை
மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று மிக பலத்த தரைக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டிட்வா புயலால் 60 கி.மீ - 70 கி.மீ வேகத்திலும் அதிகபட்சமாக 80 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும், 13 மாவட்டங்களில் 55 முதல் 65 கி.மீ வேகத்திலும் சிலசமயம், 75 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications