கனமழை + சூறைக்காற்று! சென்னை டூ கடலூர் வரை அடுத்த 2 நாட்களுக்கு அலர்ட்! வானிலை ஆய்வு மையம் வார்னிங்
சென்னை: வங்கக்கடலில் உருவாகும் புயல் காரணமாக சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களுக்கு மழை எந்த அளவுக்கு இருக்கும் என்பது குறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக நீர் நிலைகள், அணைகள் அனைத்தும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. குறிப்பாக வட தமிழகத்தில் மழையின் அளவு அதிகமாக இருக்கிறது. இந்நிலையில், வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஒரு நாள் தாமதமாக டிசம்பர் 2ஆம் தேதி புயலாக வலுப்பெறும் என்றும், இந்த புயல் தமிழகம் நோக்கி நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை மற்றும் கடலோர மாவட்டங்கள் எந்த மாதிரியான பாதிப்புகளை எதிர்கொள்ளும் என்பது குறித்து பாலச்சந்திரன் விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "புயல் 4ம் தேதி மாலை சென்னைக்கும், தெற்கு ஆந்திராவின் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்கக்கூடும். எனவே அடுத்து வரும் 4 தினங்களை பொறுத்த அளவில் வட தமிழக மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். இன்றும் நாளையும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.
டிச.3ம் தேதி திருவள்ளூர் சென்னை தொடங்கி கடலூர் வரையிலான வடக்கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
டிச.4ம் தேதியை பொருத்த அளவில் சென்னை, வேலூர், இராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழையும் திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யும்.
பலத்த காற்றைப் பொறுத்த அளவில் டிச. 3ம் தேதி திருவள்ளூர் தொடங்கி கடலூர் வரை வடக்கடலோர மாவட்டங்களில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச கூடும். சில நேரங்களில் 70 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்.
இதே டிச.4ம் தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 80 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீச கூடும். கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மணிக்கு 50-60 கி.மீ வேகத்திலும் சில நேரங்களில் 70 கி.மீ வேகத்திலும் காற்று வீசும்.
அதேபோல தென்மேற்கு வங்கக்கடல், வட தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் ஆந்திர கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று மீனவர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications