கொடுத்து வைத்த தென் தமிழகம்.. இன்னைக்கு மழை இருக்காம்! ஜில் அப்டேட் தந்த வானிலை மையம்
சென்னை: தமிழகம் முழுவதும் பிப்ரவரி இறுதி தொடங்கி தற்போது வரை வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில், இன்று தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.
வழக்கமாக மார்ச் மாதம் தொடங்கும் வெயில், இந்த முறை பிப்ரவரி இறுதியிலேயே தொடங்கிவிட்டது. எனவே, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வெயில் பட்டையை கிளப்பி வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில், கன்னியாகுமரியில் லேசான மழை பெய்திருந்தாலும், வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவே பதிவாகியிருந்தது. குறிப்பாக தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடுதலாக பதிவாகியிருந்தது. அதாவது 100 முதல் 105 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகியிருந்தது.
கடலோரப் பகுதிகளில் 91- 98 டிகிரி பாரன்ஹீட் வரையும், மலைப்பகுதிகளில் 71-86 டிகிரி பாரன்ஹீட் வரையும் வெப்பம் பதிவாகியிருந்தது. அதிகபட்சமாக ஈரோட்டில் 106.16 டிகிரியும், கரூர் பரமத்தியில் 104 டிகிரி வரையும் வெப்பம் பதிவாகியிருந்தது.
இது தவிர சேலம். தருமபுரி, திருப்பத்தூர், திருச்சி, மதுரை (விமான நிலையம் & நகரம்) மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 102-104 டிகிரி வரையில் பதிவாகியுள்ளது. இதே கோயம்புத்தூர், தஞ்சாவூர், வேலூர், திருத்தணி மற்றும் சென்னை மீனம்பாக்கம் ஆகிய இடங்களில் 100-102 டிகிரி வரை பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்த அளவில் மீனம்பாக்கத்தில் 100.7 டிகிரியும் நுங்கம்பாக்கத்தில் 96 டிகிரியும் வெப்பம் பதிவாகியுள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்த அளவில், தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. எனவே இன்று தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நாளை தொடங்கி ஏப்.7ம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
ஏப்.8 தொடங்கி ஏப்.10ம் தேதி வரை கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதே நேரம், இன்று முதல் ஏப்.8ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த ஐந்து தினங்களில் இயல்பை விட வெப்பம் அதிகமாக இருக்கக்கூடும்.
அடுத்த ஐந்து இனங்களில் காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80% ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது சில இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை பொறுத்த அளவில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 98-100 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications