சென்னை மக்களே குடை ரெடியா? புரசைவாக்கம் டூ கிண்டி.. வெளுக்கப்போகும் மழை! வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் மழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகமாக இருந்து வந்தது. அக்னி வெயில் தொடங்குவதற்கு முன்னரே 105 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் வாட்டி வதைக்க தொடங்கியது. வழக்கமாக வேலூர் மாவட்டத்தில்தான் அதிக அளவில் வெயில் பதிவாகும், ஆனால் இந்த முறை மதுரை, ஈரோடு, சென்னை என பரவலாக வெயில் 100 டிகிரியை கடந்து வீசியது. இதற்கிடையில் அக்னி நட்சத்திரம் தொடங்கி முடியும் வரை வெயில் 100 டிகிரிக்கு அதிகமாகதான் பதிவாகியிருந்தது.

பிப்ரவரி மாதத்தின் மத்தியிலேயே தொடங்கிய வெயில், பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே என மூன்றரை மாதங்கள் வெளுத்தது மட்டுமல்லாமல் ஜூன் மாதமும் கூட பொளந்து எடுத்தது. இதன் காரணமாக பல்வேறு நெருக்கடிகளை மக்கள் சந்திக்க தொடங்கினர். அம்மை, அக்கி என பல்வேறு நோய்களை எதிர்கொண்டனர். இந்நிலையில் சமீபத்தில் ஜூலை தொடக்கத்தில் லேசான மழை தொடங்கியது.
தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்தது. சென்னையில் வழக்கத்தை விட அதிகமான அளவில் மழை பெய்தது. தென் மேற்கு பருவமழை காலத்தில் சென்னையில் வழக்கமாக 41.1 மி.மீ அளவுதான் மழை பொழிவு இருக்கும். ஆனால் இந்த முறை 162 மி.மீ மழை பதிவாகி இருந்தது. இது இயல்பை விட 295 சதவிகிதம் அதிகம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் இயல்பை விட 5 சதவிகிதம் அதிகமாகவே மழை பெய்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் ஆலந்தூர், அமைந்தக்கரை, எழும்பூர், கிண்டி, மதுரவாயல், மாம்பலம், மயிலாப்பூர், புரசைவாக்கம், திருவள்ளூர், திருத்தணி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வடமேற்கு வங்கக் கடலில் நேற்று காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதாக அறிவிக்கப்பட்டது, இந்தக் காற்றழுத்த தாழ்வு நிலை நேற்றிரவு காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. இந்நிலையில், வடக்கு ஆந்திரா- தெற்கு ஒடிசாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் பின்னர், அது மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications