‛நேரடியாக தாக்கப்போகும் சூரியன்’.. தமிழகத்தில் 100 டிகிரியை தொடும் வெயில்! ஷாக் வானிலை அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த வாரம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தனியார் வானிலை ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் அதிக பனிப்பொழிவு இருக்கும் நிலையில், வரும் நாட்களில் இது படிப்படியாக குறையும் என்றும் சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை கடந்த மாதம் 15ம் தேதியுடன் முடிவுக்கு வந்த நிலையில், வடக்கு திசையில் இருந்து தெற்கு நோக்கி வீசிய குளிர் காற்றின் காரணமாக குளிரும், பனி மூட்டமும் நிலவி வருகிறது. அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் பனி மூட்டம் இருந்தாலும், காலை நேரங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே இந்த அளவுக்கு வெயில் தீவிரமாக இருப்பதற்கு காற்றின் ஈரப்பதம் குறைந்ததே காரணம் என்றும் வானிலை ஆர்வலர்கள் விளக்கமளித்துள்ளனர்.

சமீபத்தில் வானிலை ஆய்வு மையம், சென்னை, டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, அகமதாபாத், புனே, வாரணாசி, சிம்லா, கொல்கத்தா ஆகிய 10 நகரங்களில் அனல் காற்றின் விளைவு தொடர்பாக ஓர் ஆய்வை நடத்தியிருந்தது. ஆய்வின் முடிவில், சென்னை, டெல்லி உள்ளிட்ட 10 நகரங்களில் வரும் மாதங்களில் அனல் காற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதிக சராசரி வெப்பநிலையானது ஒரு வருடத்தில் 97% நாட்களுக்கு மேல் இருக்கும். இந்தியாவில் பல நகரங்களில் மார்ச் முதல் ஜூன் வரை அனல் காற்றின் தாக்கம் இருக்கும். சில நகரங்களில் இது ஜூலை வரை நீடிக்கும் என சொல்லப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டின் வெப்பநிலை இன்று முதல் அடுத்த வாரம் இறுதி வரை படிப்படியாக அதிகரிக்கும் என்று வானிலை ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். வானிலை குறித்து தொடர்ந்து அப்டேட்களை வழங்கி வரும் COMK, 'X' சோஷியல் மீடியாவில் இந்த தகவல்களை பகிர்ந்திருக்கிறது.
ஏற்கெனவே வானிலை ஆய்வு மையம் நடத்திய ஆய்வில் வெயில் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தனியார் வானிலை ஆர்வலர்களும் இதனை உறுதி செய்திருக்கின்றனர். கடந்த 15ம் தேதி நிலவரப்படி அதிகபட்சமாக ஈரோட்டில் 99 டிகிரி, நாமக்கல்லில் 96 டிகிரி, மதுரையில் 95 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. அடுத்து வரும் நாட்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை வெயில் காட்ட வாய்ப்பிருக்கிறது. எனவே தமிழக மக்கள் இனி வரும் நாட்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.












Click it and Unblock the Notifications