நடந்தாய் வாழி காவிரி! கடல் போல் இருக்கும் மேட்டூர் அணை! 117 அடியை எட்டியது! விரைவில் முழு கொள்ளளவு?
சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர் மட்டம் 117 அடியை எட்டியது. இதனால் விவசாயத்திற்கு நீர் திறக்கப்படுவது வினாடிக்கு 8 ஆயிரம் முதல் 12 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு நீரின் வரத்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில்தான் காவிரி உருவாகிறது. அங்கிருந்து பல்வேறு மாவட்டங்களை கடந்து தமிழகத்தின் எல்லையான பிலிகுண்டுலுவிற்கு வருகிறது.

அங்கிருந்து ஒகேனக்கல், தருமபுரி, சேலம் வழியாக மேட்டூர் அணையை வந்தடைகிறது. இந்த காவிரி நீர் டெல்டா விவசாயிகளின் முக்கிய நீராதாரமாக உள்ளது. இந்த அணையில் தண்ணீர் இருந்தால்தான் விவசாயம் செழிக்கும். இல்லாவிட்டால் மழை பெய்தால்தான் விவசாயம் செய்ய முடியும் என்ற நிலை உள்ளது.
மேட்டூர் அணை திறக்கப்பட்டால் அந்த நீரால் 12 மாவட்டத்தினர் பயன்பெறுவார்கள். இந்த நிலையில்தான் கடந்த ஓராண்டாகவே மேட்டூர் அணையில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. ஒரு கட்டத்தில் மேட்டூர் அணை வறண்டு அங்கிருந்த நந்தி சிலையே வெளியே தெரிந்தது. ஆனால் தற்போது தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
இதனால் கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பியுள்ளன. மேட்டூர் அணைக்கு கர்நாடகாவில் இருந்து உபரி நீர் வந்து கொண்டே இருப்பதால் முதலில் குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது விவசாய தேவைக்கும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
அந்தளவுக்கு கர்நாடகாவில் மழை கொட்டி வருகிறது. கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டிய சூழல் உள்ளது. ஆரம்பத்தில் 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இது படிப்படியாக அதிகரித்துக் கொண்டே இருந்தது. இந்த நிலையில் நேற்று காலை 1 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. பிறகு 1.52 லட்சம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
கேஆர்எஸ் அணையில் இருந்து 1 லட்சம் கனஅடியும் கபினியில் இருந்து 50 ஆயிரம் கனஅடியும் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் தற்போது கடந்த வெள்ளிக்கிழமை வரை 94 அடியாக இருந்த நிலையில் இது சனிக்கிழமை அன்று 100 அடியை எட்டியது. இதையடுத்து உபரி நீர் திறக்கும் மதகில் பொதுப் பணித் துறை அதிகாரிகள் பூஜை செய்து காவிரி அன்னையை வழிபட்டனர்.
இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நீரின் வரத்து 1.54 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால் நீரின் இருப்பு 117 அடியை தாண்டியுள்ளது. மேட்டூரில் இருந்து காவிரி நீரை திறந்துவிடுவது குறித்து நேற்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதன்படி நேற்று 12 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையில் நீர் இருப்பு 87 டிஎம்சியாக உள்ளது. இது மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணை இன்னும் சில நாட்களில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறுவை பயிர் சாகுபடிக்காகவும், ஆடிப்பெருக்கு விழாவை விவசாயப் பெருமக்கள் கொண்டாடுவதற்காகவும் மேட்டூர் அணை திறக்கப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள 13 மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 5,339 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரப்பட்டு கடைமடை வரை நீர் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications