பொதுவாக இப்படி ஆகாது! மிக்ஜாம் புயல் தனித்துவமானது! தீவிர புயலாக வலுப்பெற்று விட்டது! என்ன நடக்கும்?
சென்னை: டிசம்பர் மாதத்தில் புயல் தீவிரம் அடைவது தனித்துவமானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. பொதுவாக புயல் டிசம்பர் மாதத்தில் இப்படி ஆகாது. தீவிர புயல் வலுப்பெறுவதால் என்ன நடக்கும் என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம்.
மிக்ஜாம் புயல் தெற்கு ஆந்திர கடலோர மாவட்டங்களை ஒட்டி இணையாக கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிறகு இந்த புயலானது ஆந்திராவின் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே பப்ட்லாவை ஒட்டிய பகுதிகளில் கடக்கும் என்றும் கணிக்கப்பட்டது. இந்த மழையால் மிக மிக கனமழை பெய்யும் (115 முதல் 200 மி.மீ) மற்றும் அதற்கும் மேலாக பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.

கோதாவரி, கிருஷ்ணா, பபட்லா, குண்டூர், ஸ்ரீகாகுளம், பாலநாட்டு, ஏனாம், காக்கி நாடா, விசாகப்பட்டினம், கர்னூல் , ஒய்.எஸ்.ஆர் ஆகிய மாவட்டங்களில் மழை இந்த அளவு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. மிக்ஜாம் புயல் ஆந்திராவில் பயிசேதங்களை அதிக அளவில் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறுவடையை நெருங்கும் நெல், அன்னாசி மற்றும் இதர பயிர்கள் மழையால் அதிகம் சேதம் அடையும் என்று தெரிகிறது.
ஐந்து புயல் உருவாகின்றன: நாளை பிற்பகல் புயல் கரையைக் கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 90-100 கி.மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கி.மீட்டர் வேகத்திலும் காற்று வீசும். புயல் கரையக் கடக்கும் போது அலைகளின் சீற்றம் 1.5 மீட்டர் அளவுக்கு இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆந்திர கடலோர பகுதிகளில் புயல் கரையைக் கடந்த பின்னரும் கூட வடமேற்கு மற்றும் தெற்கு ஒடிசா நோக்கி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், செவ்வாய்க்கிழமை மற்றும் புதன் கிழமைகளில் கனமழை வெளுத்து வாங்கும் என்று ஆரஞ்சு அலர்ட் இந்திய வானிலை ஆய்வு மையத்தால் கொடுக்கப்பட்டுள்ளது. மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகள் ஆண்டுதோறும் புயலால் பாதிக்கப்படுகிறது. கால நிலை அடிப்படையில் பார்த்தோம் என்றால், அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவை உள்ளடக்கிய வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் சுமார் ஐந்து புயல் உருவாகின்றன.
புயல் எப்போது உருவாகும்: இவற்றில் வங்காள விரிகுடாவில் 4 புயல்களும் அரபிக்கடலில் ஒரு புயலும் சராசரியாக ஆண்டுக்கு உருவாகின்றன. பருவமழைக்கு முந்தைய சீசன் (ஏப்ரல் - ஜூன்) மற்றும் பருவமழைக்கு பிறகு (அக்டோபர் - டிசம்பர்) புயல் உருவாகும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. பருவமழைக்கு முந்தைய (ஏப்ரல் - ஜூன்) மற்றும் பருவமழைக்குப் பிந்தைய (அக்டோபர் - டிசம்பர்) மாதங்களில் இந்தப் படுகையில் சூறாவளி உருவாகும் வாய்ப்பு அதிகம்.
சாதகமான சூழல்களால் மே மற்றும் நவம்பர் மாதங்களில் உருவாகும் புயல்கள் மிகவும் தீவிரமாக இருக்கும். மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திரா, தமிழ்நாடு குஜராத், மகராஷ்டிரா ஆகியவை புயலால் அதிகம் பாதிக்கப்படுகிறது. வங்காள விரிகுடாவில் உருவாகும் புயலை விட அரபிக்கடலில் உருவாகும் புயல் மிக அதி பாதிப்பை ஏற்படுத்துகிறது.
கடல் வெப்ப நிலை: வெப்ப மண்டல பகுதிகளில் உருவாகும் புயல் (tropical cyclone) கடலில் ஏற்படும் வெப்பத்தின் காரணமாக ஏற்படுகிறது. இது போக கடலில் நிலவும் வெப்பமான சூழலும் புயல் விரைவாக தீவிரம் அடைய பங்களிக்கிறது. கடலில் வெப்ப நிலை 26 டிகிரி செல்சியஸ் அதற்கு மேலே இருப்பது புயல் உருவாவதற்கான உகந்த சூழலாக இருக்கிறது.
மேக வெடிப்பு போல: தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களை புரட்டி போட்டுள்ள மிக்ஜாம் புயல் சென்னையை கடந்துள்ளது. இந்த புயல் நாளை முற்பகலில் ஆந்திராவின் நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்க உள்ளது. மிக்ஜாம் புயலால் சென்னையே தத்தளிக்கிறது. நேற்று இரவு முதல் மேக வெடிப்பு போல மழை உக்கிரமாக பெய்து வருகிறது. மழை எப்போது நிற்கும் என்று மக்கள் ஏங்கும் அளவுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாழ்வான பகுதிகளில் வெள்ளம் இடுப்பளவுக்கு உள்ளது. மிக்ஜாம் புயலால் சென்னையில் 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது. தீவிர புயலாக வலுப்பெற்ற மிக்ஜாம் புயலால் எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படும். வங்காள விரிகுடாவில் ஏற்படும் புயல் அதி தீவிர பாதிப்பை ஏற்படுத்துவது ஏன் என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
ஏன் தனித்துவமானது?: மிக்ஜாம் புயல் முதலில் வெப்பமண்டல சூறாவளியாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்தது. காற்றின் வேகம் மணிக்கு 62-87 கி.மீட்டர் அளவுக்கு இருக்கும் என்றும் ஆந்திராவில் கரையை கடக்கும் என்றும் கூறியது. எனினும், டிசம்பர் 3 ஆம் தேதி புயல் அதி தீவிரமானதாக இருக்கும் என வானிலை மையம் கூறியது.
அதாவது காற்றின் வேகம் 88-166 கி.மீட்டர் வேகத்திற்கு இருக்கும் என்று கணிக்கப்பட்டது. டிசம்பரில் இப்படி புயல் தீவிரம் அடைவது தனித்துவமானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியது. ஆந்திர பிரதேச கடலோரத்தில் இயல்பை விட வெப்ப அளவு அதிகமாக இருந்ததே மிக்ஜாம் புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற காரணம் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.












Click it and Unblock the Notifications