புயல், பருவமழையை எதிர்கொள்ள தயார்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி அமைச்சர் KKSSR ராமச்சந்திரன்
சென்னை: நடப்பாண்டில் பருவமழை அதிகமாக பெய்யும் என எச்சரித்துள்ளதால் அதற்கேற்ப ஏற்பாடுகளை செய்துள்ளோம் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். புயல் உருவாக உள்ள நிலையில் மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கையாக இருக்க மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை கரைக்கு திரும்ப அறிவுறுத்தி உள்ளோம் என அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் வரும் நாட்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதால் நிவாரண முகாம்களை தயாராக வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் உயர் அதிகாரிகளுடன், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இன்று காலை ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து மழை நிலவரங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
அப்போது அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறுகையில்,
வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள மோந்தா புயல் சென்னையை நோக்கி வருவதாக முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அது ஆந்திராவை நோக்கி நகர்வதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும் அதன் ஒரு பகுதியாக, சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பெரிய அளவில் மழை பெய்யக்கூடும். அந்த மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் வட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீர்வளத்துறை, வருவாய்த்துறை இணைந்து ஏரிகளின் நீர்மட்டத்தை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
உபரிநீர் திறந்து விடும்போது அசம்பாவிதம் நடக்காத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்கிறோம். நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. தேவையான பொருட்களை மக்களுக்கு வழங்குவதற்கு தயாராக உள்ளோம்.
நெல் கொள்முதல் இழப்பீடு தொகை வழங்க சேதமடைந்த பகுதியின் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழையை சாமர்த்தியமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையாள்வார். கடந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்ட முகாம்கள் அனைத்தும் இந்த ஆண்டும் தயார் நிலையில் உள்ளது. இரண்டு ரேடார்கள் வாங்குவதற்கு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் 24ஆம் தேதி வரை 21.08 செ.மீ. மழை பெய்துள்ளது. அக். 25ஆம் தேதி வரை பெய்த மழைக்கு இதுவரை 31 பேர் பலியாகியுள்ளனர், அதிகபட்சமாக கடலூரில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 485 கால்நடைகள் உயிரிழந்துள்ளன என்றும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications