தெளிய வைத்து அடிக்கும் மிக்ஜாம் புயல்! இருளில் சென்னை.. கரண்ட் எப்போ வரும்.. அமைச்சர் தங்கம் பதில்
சென்னை: சென்னையில் மிக்ஜாம் புயலால் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் இல்லாத நிலையில் எப்போது மின்சாரம் வரும் என்பது குறித்து மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் சென்னைக்கு 120 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இதனால் நேற்று இரவு முதல் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்குகிறது. கூடவே காற்றும் வீசி வருகிறது. புயல் வடதமிழகம் வழியாக நகர்ந்து ஆந்திரா செல்கிறது.

இதனால் கடும் காற்று வீசியது. இந்த நிலையில் திரும்பிய திசையெல்லாம் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. வேளச்சேரி, மடிபாக்கம், மேடவாக்கம், கோவிலம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் முதல் தளம் வரை தண்ணீர் வந்துவிட்டது.
சென்னையில் இன்டர்நெட் சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னையில் பல்வேறு இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. துணை மின் நிலையங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.
பல இடங்களில் மின் கம்பிகள் மீது மரங்கள் விழுந்துவிட்டன. துணை மின் நிலையங்களில் நீரை அகற்றம் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருப்பதாவது: துணை மின் நிலையங்களில் தேங்கியுள்ள தண்ணீரால் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மின் நிலையங்களில் தேங்கிய நீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஒரு சில இடங்களில் மரங்கள் விழுந்துள்ளதால் மின்சாரத்தை கவனத்துடன் கையாள வேண்டிய நிலை உள்ளது. மழை பொழிவு குறைந்ததும் மின் விநியோகம் விரைந்து வழங்கப்படும். அது வரை மக்கள் பொறுமை காக்க வேண்டும் என அமைச்சர் கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications