சென்னையில் காலை முதலே வானம் மேகமூட்டம்! திடீரென பெய்த மழை! குளிர்ந்த தலைநகர்!
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது. தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை ஆகிய புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வந்தது.

இதைத் தொடர்ந்து வேளச்சேரி, கிண்டி, முகப்பேர், கோயம்பேடு, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. இதனால் கோடை வெப்பம் தணிந்து பூமியே குளிர்ச்சியான சூழலில் உள்ளது.
சென்னை வானிலை மையம் அறிவுறுத்தலின்படி இன்று தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிலும் தென்காசி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுவதுடன், அவர்களுடைய அரசு ஆவணங்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மழை எச்சரிக்கையால் தூத்துக்குடி, கன்னியாகுமரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடதமிழகத்தில் புதுவை, காரைக்கால் வரை மிதமான மழை பெய்யக் கூடும். இன்றும் நாளையும் தென் தமிழகம் முழுவதும் மேகக் கூட்டங்கள் நிறைந்திருக்கும். எனவே பரவலாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் காலை 10 மணி வரை மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications