மீண்டும் ரூம் ஹீட்டருக்கே திரும்பிய ஊட்டி மக்கள்.. ஜில்ஜில் கூல் கூலான உதகை! மழையால் முறிந்த மரம்
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நேற்று மதியம் 3 மணிக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை மாலை வரை தொடர்ந்து பெய்தது. இதனால் சிங்காரா பகுதியில் ராட்சத மரம் விழுந்ததில் இரு கார்கள் சேதமாகின.
தமிழகத்தில் கோடை வெயில் தகித்து வருகிறது. நேற்று முதல் அக்னி வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியது. மலை பிரதேசமான ஊட்டியில் கடந்த சில தினங்களாக மழை சுட்டெரித்தது.

இதனால் அங்குள்ள உள்ளூர் மக்கள் ஏர் கூலரை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினர். அதுபோல் தண்ணீரை கொடுக்கும் குந்தாரா அணையிலும் தண்ணீர் குறைந்த வண்ணம் இருந்தது.
அதாவது 30 ஆண்டுகளுக்கு பிறகு அந்த அணையில் இப்படி தண்ணீர் குறைந்து வறண்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி எடுத்த இடங்களுக்கு வருண பகவானின் கருணையால் மழை பெய்தது. வேலூர் , திருப்பத்தூரில் ஆலங்கட்டி மழை பெய்தது.
அது போல் ஏற்காடு, சேலம் பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. அந்த வகையில் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நேற்று மதியம் 3 மணிக்கு இடி, மின்னலுடன் தொடங்கிய மழை மாலை வரை தொடர்ந்தது. படகு இல்லம் சாலையில் மழை நீர் தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்காவில் மழையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் மலர்களை ரசித்தனர். குன்னூரில் மழை பெய்ததால் சிங்காரா பகுதியில் சாலையில் இருந்த ராட்சத மரம் ஒன்று விழுந்ததில் இரு கார்கள் சேதமடைந்தன. கார் டிரைவர் நந்தகுமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
அங்கு இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குன்னூர் தீயணைப்பு துறையினர் மரத்தை அகற்றியதும் போக்குவரத்து சீரானது. ஊட்டி, குன்னூர், புறநகர் பகுதிகளில் மழைக்கு பிறகு இதமான சூழல் நிலவியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று மாலை வரை ஊட்டியில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தொட்டபட்டாவிலும் நேற்று மழை பெய்தது. அது போல் கோவையிலும் நேற்றைய தினம் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் எப்போதும் இல்லாத அளவுக்கு கோவையில் வெயிலால் பாதிக்கப்பட்ட மக்கள் இந்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications