சென்னையில் மிதமான மழை.. இன்னைக்கு முழு நாளும் இப்படித்தான் இருக்கும்! வெதர் அப்டேட்
சென்னை: சென்னை உட்பட 13 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இந்நிலையில் சென்னையில் தற்போது மழை தொடங்கியுள்ளது.
சென்னையின் நகர் பகுதிகளான அண்ணாநகர், கோயம்பேடு, வில்லிவாக்கம், பாடி, அயனாவரம், புளியந்தோப்பு, சென்ட்ரல், எழும்பூர், வியாசர்பாடி, பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதேபோல புறநகர் பகுதியான கொளத்தூர், அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

முன்னதாக சென்னை மழை குறித்து, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது x பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். அதில், "கடலில் இருந்து சென்னை நகரை நோக்கி நிறைய மேகக் கூட்டங்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. இன்று காலை வரை மழை பொழிவுக்கான உச்ச நேரமாக இருக்கும். நாளை, பருவமழை தொடங்குவது உறுதியாகிவிட்டது. ராமநாதபுரம் முதல் சென்னை வரையிலான தமிழகத்தின் அனைத்து கடலோர மாவட்டங்களிலும் பரவலான மழை பெய்யும்.
நாளை ஒரு பருவமழை காலையைப் பார்க்க நீங்கள் விழித்தெழுவீர்கள். இது வெறும் ஆரம்பம் தான், போகப் போக இந்த மாதத்தில் நிறைய மழையை எதிர் பார்க்கலாம்" என்று கூறியிருந்தார்.
அதேபோல தனியார் வானிலை மையம் (COMK) கொடுத்துள்ள அப்டேட்டில், "சென்னை கடற்கரையை ஒட்டி, ஒரு பலமான இடியுடன் கூடிய மழைப் பகுதி உருவாகியுள்ளது. இது இன்னும் 15 முதல் 30 நிமிடங்களில் கடற்கரைப் பகுதிகளில் அடுத்த சுற்று மழையைத் தொடங்க வாய்ப்புள்ளது. நகரின் பெரும்பாலான இடங்களில் மிதமான முதல் சற்று கனமான மழை பெய்யக்கூடும். ECR / OMR பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த மழைப்பகுதி இறுதியில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நகரும். வடக்கு டெல்டா மற்றும் புதுச்சேரிக்கான வானிலை நிலவரத்தை பொறுத்தவரை, வடக்கு டெல்டா பகுதிகளில், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சுற்றி கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரியில் தற்போதுதான் மழை தொடங்கியுள்ளது. இது அடுத்த ஒரு மணி நேரத்தில் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நகரும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்திற்கான மழை எச்சரிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு காலை 10 மணி வரை கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications