திடீர் ட்விஸ்ட் தந்த மொந்தா புயல்.. இப்படி போட்டு அடிக்குதே.. வங்க கடலில் நடக்கும் சுவாரசிய சம்பவம்
சென்னை: வங்கக் கடலில் உருவான 'மொந்தா' புயல், தீவிரப் புயலாக வலுப்பெற்று, ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களை அச்சுறுத்தி வருகிறது. திடீர் திருப்பமாக இந்த புயல் நகரும் வேகம் குறைந்து உள்ளது. தொடக்கத்தில் வேகமாக நகர்ந்த புயல் தற்போது கிட்டத்தட்ட நகராத நிலைக்கு வந்துள்ளது.
தொடக்கத்தில் புயல் நகரும் வேகம் 25 கிமீ என்ற அளவில் இருந்தது. இப்போது புயல் நகரும் வேகம் 10 கிமீ என்று மாறி உள்ளது. இந்தப் புயலால் பலத்த காற்றும், கனமழையும் பெய்யக்கூடும் என்பதால், இரு மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இன்று மாலை அல்லது இரவுக்குள் இந்தப் புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை நிலவரப்படி, 'மொந்தா' புயல் விசாகப்பட்டினம் அருகே காக்கிநாடாவில் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், காக்கிநாடா கடற்கரை பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் வீசும் காற்றும், பலத்த மழையும், ஏற்கனவே கடலோரப் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
மொந்தா புயல் எங்கே?
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, திங்கள்கிழமை காலை நிலவரப்படி, 'மொந்தா' புயல் மச்சிலிப்பட்டினத்தில் இருந்து சுமார் 190 கி.மீ. தென்கிழக்கிலும், விசாகப்பட்டினத்தில் இருந்து 340 கி.மீ. தெற்கிலும் நிலை கொண்டிருந்தது. இந்தப் புயல் இன்று மாலை அல்லது இரவுக்குள் மச்சிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மொந்தா புயலின் தாக்கம் காரணமாக, ஆந்திரப் பிரதேசத்தில் கடல் கொந்தளிப்பு, வெள்ளம் மற்றும் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, மாநிலத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என உறுதியளித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேசம் மொந்தா
மொந்தா புயலின் வெளிவட்டப் பகுதிகள், சித்தூர், திருப்பதி, காக்கிநாடா உள்ளிட்ட கடலோர மாவட்டங்களைத் தாக்கியுள்ளன. இதனால் இந்த மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சித்தூர் மாவட்டம், நாகரி தொகுதியில் கடந்த நான்கு நாட்களாக மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது.
குஷஸ்தலி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், நாகரி நகரம் மற்றும் திருவட்டனி, பள்ளிப்பட்டு போன்ற கிராமப்புறப் பகுதிகளுக்கு இடையேயான முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டன. ஆற்றின் கரைகளில் வெள்ள அபாயம் காரணமாக, காவல்துறை போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை விதித்ததுடன், மாற்று வழிகளில் வாகனங்களை திருப்பி அனுப்பியதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து 1,000 கன அடி நீர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திறந்துவிடப்பட்டது. அதேசமயம், உள்ளூர் நிர்வாகங்கள் தொடர்ந்து உஷார் நிலையில் உள்ளன. காக்கிநாடா மாவட்டத்தில் பலத்த காற்று வீசியதுடன், உப்பாதா பகுதியில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது.
அலைகள் உள்நோக்கி வந்து, கடற்கரைப் பகுதிகளில் அரிப்பை ஏற்படுத்தி, மீனவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தின. கடல் நீர் உள்நோக்கி புகுந்ததால், உப்பாதா, சுப்பம்பேட்டை, மாயப்பட்டினம் மற்றும் சூராதப்பேட்டை பகுதிகளில் இருந்து குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன.
திருப்பதியின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "75 கி.மீ. நீளமுள்ள கடற்கரையில் பரவியுள்ள ஐந்து கடலோர மண்டலங்கள், கனமழை மற்றும் பலத்த காற்றை எதிர்கொள்ளக்கூடும். பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் முழு பலத்துடன் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன" என்றார்.
ஒடிசா மொந்தா
மொந்தா புயல் ஆந்திராவில் கரையைக் கடந்தாலும், அதன் தாக்கம் ஒடிசாவிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மாநில அரசு மல்காங்கிரி, கோராபுட், நவரங்கபூர், ராயகடா, கஜபதி, கஞ்சம், கலாஹண்டி, கந்தமால் ஆகிய எட்டு தென் மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இம்மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை முதல் கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சுரேஷ் பூசாரி, "ஆபத்துகளைத் தவிர்த்து, உயிர்ச்சேதம் இல்லாத நிலையை எட்டுவதே எங்களின் நோக்கம்" என்று வெளியேற்றும் பணிகளை மேற்பார்வையிட்டபோது தெரிவித்தார்.
அரசு 1,445 புயல் பாதுகாப்பு மையங்களைத் திறந்துள்ளதுடன், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), ஒடிசா பேரிடர் துரித நடவடிக்கைப் படை (ODRAF) மற்றும் தீயணைப்புத் துறையில் இருந்து 140 மீட்புக் குழுக்களைத் தயார் நிலையில் வைத்துள்ளது. கஜபதி மாவட்டத்தில் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ள மலைப் பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் புயலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 32,000 மக்களை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருவதாக பூசாரி மேலும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications