தரையிறங்க முடியாமல் திணறும் விமானங்கள்.. ஓடுபாதையை போர்த்திய மூடுபனி! டெல்லியில் விமான சேவை பாதிப்பு
டெல்லி: வட இந்தியாவில் கடந்த சில நாட்களாக அடர்த்தியான பனி மூட்டம் நிலவி வருகிறது. டெல்லியில் பனி மூட்டம் காரணமாக 50க்கும் அதிகமான விமானங்கள் தாமதமாகியுள்ளன.
நாட்டின் வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. டெல்லியில் கடந்த சில நாட்களாக வெப்ப நிலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களின் சில பகுதிகளிலும் குளிர் அலையால் பனிமூட்டமான நிலை நீடித்தது. ஹரியானாவின் ஹெசாரில் குறைந்தபட்ச வெப்பநிலை 0.8 டிகிரி செல்சியஸாகவும், உ.பியின் மீரட்டில் 1.5 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி உள்ளது.

இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த மூன்று நாட்களுக்கு குளிர் அலை தொடரும் என எச்சரித்திருக்கிறது. வடமேற்கு இந்தியாவில் இமயமலையிலிருந்து வீசும் வடமேற்கு காற்று காரணமாக, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்தியப்பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு குறைந்தபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸாக நீடிக்கும். அதனைத் தொடர்ந்து, 3 நாட்களுக்கு பிறகு 3-5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர் பனிமூட்டம் காரணமாக ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. 50க்கும் அதிகமாக விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை தாமதமாகியுள்ளது. கடந்த மூன்று நாட்களாக 600 விமானங்கள் பனிமூட்டம் காரணமாக தாமதமாக புறப்பட்டு சென்றன. அதேபோல 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. இதனையடுத்து ஜன.21ம் தேதி டெல்லியில் வானிலை ஓரளவு சீரானது. எனவே விமான சேவை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தது. ஆனால் தற்போது மீண்டும் பழைய நிலைமை திரும்பியுள்ளது.
#WATCH | More than 50 flights delayed at Delhi’s Indira Gandhi International (IGI) airport as a thick layer of fog grips the national capital, according to airport sources.
— ANI (@ANI) January 31, 2024
(Visuals from IGI airport) pic.twitter.com/HRLd6wFl3d
இன்று டெல்லியில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. எனவே பனிமூட்டம் ஓரளவு குறையலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications