அலர்ட்! தென் தமிழகத்தை பிரித்து மேயும் கனமழை.. அவசர உதவி எண்களை அறிவித்தது நெல்லை மாவட்ட நிர்வாகம்!
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில், கனமழை பிரித்து மேய்ந்து வரும் நிலையில், மழைக்கால அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி கரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி பகுதியில் நேற்றய இரவு முதல் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இந்நிலையில், இன்று காலை முதல் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த 4 மாவட்டங்களிலும், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கடந்த சில நாட்களாகவே லேசான மழை பெய்து வந்த நிலையில், நேற்று பிற்பகக் முதல் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை நீடித்தது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
அம்பாசமுத்திரம், நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 18 மழை மானிகளில் இன்று காலை வரை எடுக்கப்பட்ட அளவீட்டின்படி அதிகபட்சமாக ராதாபுரம் பகுதியில் 36 மி.மீ மழையும், கன்னடியன் கால்வாய் மற்றும் களக்காடு பகுதிகளில் 33 மி.மீ, பாபநாசம் பகுதியில் 31 மி.மீ மழையும், அம்பாசமுத்திரம் பகுதியில் 30 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஏற்கனவே நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் நீர்நிலைகளில் பொதுமக்கள் இறங்க வேண்டாம், ஆற்றுப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாலுகா வாரியாக கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் விரைந்துள்ளன. அரக்கோணத்தில் இருந்து 4 பேரிடர் மீட்புக் குழுக்கள் புறப்பட்டுச் சென்றுள்ளன.
அவசர உதவி எண்கள்: இந்நிலையில், நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் மழைக்கால அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ள 1077 என்ற எண்ணிலும், மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்திற்கு 1070 என்ற எண்ணிலும், மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு 94987 94987 என்ற எண்ணிலும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் உதவிக்கு 101 & 102 ஆகிய எண்களிலும் அழைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் தமிழக பகுதிகளான கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதியில் மழை தொடங்கியுள்ள நிலையில் இந்தப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு இடைவிடாது மழை பெய்யும். மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் அணை இரண்டில் இருந்து உபரி நீர் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications