வங்கக்கடலில் புதிய புயல் சின்னம்.. இன்று நடக்கும் முக்கிய மாற்றம்! வானிலை மையம் வார்னிங்
சென்னை: கடந்த மாதம் தமிழ்நாட்டில் மழை இயல்பை விட 36% அதிகமாக பெய்திருந்தது. அக்டோபர் மாதம் பெரும்பாலும் தென்மேற்கு பருவமழைதான் அதிகமாக பெய்தது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் சூழலில், அதை வலுப்படுத்தும் விதமாக வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதன்படி, "அக்.31ம் தேதி மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், கிழக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, நவ.1ம் தேதியான நேற்று காலை 5.30 மணி அளவில் மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்து, காலை 8.30 மணி அளவில், அதே பகுதிகளில் நிலவுகிறது.

இது, அடுத்த 24 மணி நேரத்திற்கு, மேலும், கிழக்கு-வடகிழக்கு திசையில், வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் வழியாக, தெற்கு குஜராத் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு மஹாராஷ்ட்ரா கடலோரப்பகுதிகளை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறையக்கூடும்.
வங்கக்கடலை பொறுத்தவரை, தெற்கு மியான்மார் கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
அதேபோல கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் (நவ.2,3 தேதிகளில்) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நவ.4 மற்றும் 5ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நவ.6 மற்றும் 7ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (02-11-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல அக்டோபர் மாதத்தில் மட்டும் தமிழகம் 18 செ.மீ அளவுக்கு மழையை பெற்றிருக்கிறது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதாவது, வடகிழக்கு பருவமழை அக்.16ம் தேதி தொடங்கியது. இது டிசம்பர் வரை நீடிக்கும். இடைப்பட்ட மூன்று மாதங்களில் மொத்தம் சராசரியாக 44 செ.மீ அளவுக்கு மழை பெய்யும். ஆனால் அக்டோபரில் மட்டும் 18 செ.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது.
சென்னையை பொறுத்தவரை அக்டோபர் மாதத்தின் இயல்பான மழை அளவு 27 செ.மீதான். ஆனால் 35 செ.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இது இயல்பான மழையின் அளவை விட 29% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications