தமிழ்நாட்டில் கனமழை பெய்யுமா? ஒரே வார்த்தையில் வெதர்மேன் கொடுத்த பதில்! கிளைமேட் எப்படி இருக்கும்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே ஓரளவுக்கு நல்ல மழை பெய்து வந்தது. இதற்கிடையே இப்போது மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் வரும் நாட்களில் மழை அதிகரிக்கும் என மக்கள் எதிர்பார்த்தனர். இதற்கிடையே பிரபல தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் இப்போது வடகிழக்கு பருவமழை சீசனாக இருக்கிறது. கடந்த மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்த மாதம் மழை ஓரளவுக்குக் குறைந்திருக்கிறது. இருந்த போதிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்தே வருகிறது. மேலும், கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும் மழை பெய்து வருகிறது.

வெதர்மேன்
இதற்கிடையே தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்குக் கனமழை பெய்யுமா என்பது குறித்து பொதுமக்களுக்குக் கேள்வி இருந்தது. இது தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இது குறித்து விளக்கமளித்துள்ளார். இப்போது வானிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து விளக்கியுள்ள அவர், தமிழகத்தில் கனமழை பெய்யுமா என்பது குறித்தும் எளிமையாக விளக்கியுள்ளார்.
மேலடுக்கு சுழற்சி
இது தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில், "அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி விலகிச் சென்றதால், தமிழகத்தின் மீதான அதன் தாக்கம் குறைந்துள்ளது. அதே சமயம், இலங்கைக் கடற்கரையை ஒட்டி ஒரு புதிய மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இது இன்று தமிழக கடலோரப் பகுதிகளில் மழையைக் கொடுக்கலாம்.
கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள மாஞ்சோலை மலைப் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவியது.
கனமழை இருக்கா?
அடுத்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை.. இலங்கை கடற்பகுதியின் கிழக்கே மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளதால், இதனால் ஏற்படும் வானிலை மாற்றம் கடலோர மாவட்டங்களில் உணரப்படும். இதனால் சென்னையில் இருந்து தூத்துக்குடி வரையிலான கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்கள் பெரும்பாலும் வறண்ட வானிலையே இருக்கும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும், மிகக் கனமழைக்கான எச்சரிக்கை பெய்யுமா எனக் கேட்டால் அதற்கான வாய்ப்பு இல்லை என்றும் அவர் ஒரே வார்த்தையில் பதில் கொடுத்துள்ளார்.
வானிலை மையம்
முன்னதாக வானிலை மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "இன்றைய தினம் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளை பொறுத்தவரை இன்று (20-11-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (21-11-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications