வடகிழக்கு பருவமழை.. காத்திருக்கும் சம்பவங்கள்.. தீவிர புயலாகும் தேஜ்.. மீனவர்களே கரை திரும்புங்கள்
சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கினாலும் வலு குறைந்தே இருக்கும் என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். தேஜ் புயல் தீவிர புயலாக மாற இருப்பதால் ஆழ்கடலில் இருக்கின்ற மீனவர்கள் கரை திரும்ப வேண்டும் என்றும் பாலச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.
ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, கேரளாவில் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்று காலை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 8.30 மணியளவில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது.

இது அக்டோபர் 22ஆம் தேதி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
நேற்று அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை தேஜ் புயலாக வலுப்பெற்று தெற்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த மூன்று நான்கு தினங்களில் மிக தீவிர புயலாக வலுப்பெற்று ஏமன் மற்றும் ஓமன் கடலோரப் பகுதிகளுக்கு நகரக்கூடும்.
இன்றும் நாளையும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன், தமிழகம், புதுவை காரைக்கால் மற்றும் கேரள பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கி இருக்கிறது. அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள தேஜ் புயல் வலுவடைந்து அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும். அது வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து அக். 25 ஆம் தேதி தெற்கு ஓமன் மற்றும் அதனை ஒட்டிய கடலோரப் பகுதிகளுக்கு நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தில் 7 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.
மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் அக்டோபர் 25 ஆம் தேதி வரை அரபிக் கடல் பகுதிக்கும், அக்டோபர் 26 ஆம் தேதி வரை வங்கக்கடல் பகுதிக்கும் செல்ல வேண்டாம். ஆழ்கடலில் இருக்கின்ற மீனவர்கள் கரை திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications