வடகிழக்கு பருவமழை காலத்தில் நிறைய புயல்கள்! மேகவெடிப்பு மழை இருக்கும்! வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் 16 ஆம் தேதி முதல் 18ஆம் தேதிக்குள் தொடங்க வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு 50 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் அமுதா தெரிவித்துள்ளார். அது போல் இந்த ஆண்டு நிறைய புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு பருவமழை அக்டோபர் 16 ஆம் தேதி முதல் 18ஆம் தேதி இந்திய பகுதிகளில் இருந்து விலகுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளன. அதே சமயம் வளிமண்டல கீழடுக்குகளில் மேற்கு திசை காற்று வீசி வருகிறது.

இது கிழக்கு- வடகிழக்கு திசை காற்றாக மாறும்போது தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதிக்குள் தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் உள்ளன. கடந்த 15 ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதத்தில்தான் தொடங்கி உள்ளது.
இரு ஆண்டுகளை தவிர, மற்ற ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகம் பதிவாகியுள்ளது. நடப்பாண்டு, வடகிழக்கு பருவமழை வடமாவட்டங்களில் இயல்பாகவும் இயல்பைவிட அதிகமாகவும் பதிவாகும். தென்மாவட்டங்களில் இயல்பைவிட குறைவாகவும் இருக்கும்.
வழக்கமாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதம் என 92 நாட்களில் வடகிழக்கு பருவமழை 44 செ.மீ. பதிவாகும். நடப்பாண்டு 50 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மட்டுமே அதிகளவு காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல் சின்னங்கள் உருவாகியுள்ளன.
அது போல் இந்த ஆண்டும் புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்புள்ளது. எத்தனை புயல் உருவாகும், எங்கே உருவாகும், தீபாவளி அன்று மழை இருக்குமா என இப்போதே கணிக்க முடியாது. தாழ்வு மண்டலம், புயல் சின்னம் உருவாகும் போது 20 செ.மீ. மழை வரை பெய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது.
அதற்கான முன்னேற்பாடுகளை நாட்டின் குடிமக்களாக நாம் எடுக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை காலங்களில் டெல்டா மாவட்டங்களில் மழைப் பொழிவு காணப்படும். வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ. மழை பெய்தால் அது மேகவெடிப்பு. அது போல் ஒரு மழை எங்கு வேண்டுமானாலும் பெய்யலாம். அதே நேரத்தில் இந்த இடத்தில்தான் இருக்கும் என 100 சதவீதம் நம்மால் கணிக்க முடியாது.
இயற்கையை இயற்கையாகத்தான் பார்க்க முடியும். 22 ஆம் தேதி தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது என அமுதா கூறினார்.
இந்த நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீலகிரிக்கு 'ஆரஞ்சு அலர்ட்' வானிலை ஆய்வு மைய அறிக்கை: வட மாவட்ட கடலோர பகுதிகள் மற்றும் வடக்கு ஆந்திரா, அதை ஒட்டிய பகுதிகள் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. இதன் காரணமாக, நீலகிரி மாவட்டத்தில், இன்று கன மழை முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால், அந்த பகுதிகளுக்கு, 'ஆரஞ்சு அலர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை மற்றும் திருப்பத்துார் மாவட்டங்களில், இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்தில், சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications