தூத்துக்குடி டூ சென்னை இன்று முதல் மழை! குடை அவசியம் மக்களே! இன்னும் ஒரு நாள்தான்! வெதர்மேன் அப்டேட்
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய கடலோர மாவட்டங்களுக்கு இன்று முதல் மழை தொடங்கும். இன்னும் ஒரு நாளில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதீப் ஜான் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட கடலோர மாவட்டங்களில் இன்று முதல் மழை பெய்யத் தொடங்கும். நாளை முதல் 18-ஆம் தேதி வரை மழையின் தீவிரம் அதிகரிக்கும்.

கடலில் இருந்து கடலோர மாவட்டங்களை நோக்கி மேகக் கூட்டங்கள் படையெடுப்பது அழகான காட்சி. இன்றும் குறைந்த நேரத்தில் அதிக மழை பொழிவை ரசியுங்கள். சிறிய மேகக் கூட்டங்கள் கூட எந்த நேரத்திலும் 20 முதல் 30 மி.மீ. மழையை கொடுக்கலாம்.
எனவே தூத்துக்குடி முதல் சென்னை வரை இருக்கும் மக்கள் இன்று முதல் எங்கு சென்றாலும் குடையையும் மழை கோட்டையும் கொண்டு செல்வது அவசியமான ஒன்று. இன்னும் ஒரு நாளில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கும். இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரளா கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 1 மணிவரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை வரும் 16 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை இந்தியாவை விட்டு விலக போகிறது. எனவே வடகிழக்கு பருவமழை காலம் தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள், அந்த காலகட்டத்தில் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் "தீபாவளி பண்டிகைக்கு மழை வருமா என்றால் புயல், காற்றழுத்தத்தை போல் மழை நாள் முழுவதும் கொட்டிக் கொண்டே இருக்காது என்றும் விட்டுவிட்டு மழை பெய்யும். தீபாவளி அன்று அதன் தீவிரம் குறையும்" என்றும் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications