1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. சென்னை, தூத்துக்குடி உட்பட 9 துறைமுகங்களில் அலர்ட் மோட்!
சென்னை: சென்னை, நாகை, தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்றைய தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெற்றுள்ளது. இது நாளை காலை தீவிர புயலாக மாறும். இந்த தீவிர புயலுக்கு 'ரெமல்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ரெமல் புயல் வடகிழக்கு திசையில் நகர்ந்து வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மே 25ஆம் தேதி மாலை நிலவும். இதனால் குமரிக் கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு மே 26ஆம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ரெமல் புயல் 26ஆம் தேதி நள்ளிரவில் சாகர் தீவு மற்றும் கெபுபாரா இடையே வங்கதேசம் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கடற்கரையில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வருகிற 26ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல, மேலும் மத்திய வங்கக் கடலின் மத்திய பகுதிகள், தெற்கு வங்கக் கடல், அதை ஒட்டிய மத்திய மேற்கு, மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால் மே 25-ம் தேதி வரை அந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குமரிக் கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு வரும் 26-ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம். அதேபோல, மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால் மே 25-ம் தேதி வரை அந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.
வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதன் காரணமாக தமிழ்நாட்டில் 9 துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, சென்னை உட்பட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றுமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளதன் அடிப்படையில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புயல் கூண்டு என்பது மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் துறைமுகங்களில் ஏற்றப்படுகிறது. புயல் உருவாகும் சூழல் முதல் உச்சகட்ட எச்சரிக்கை வரை உள்ள நிலையை குறிக்கும் வகையில் மொத்தம் 11 வகை புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படும். ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், புயல் உருவாகக் கூடிய வானிலை ஏற்பட்டுள்ளதாக அர்த்தம். துறைமுகங்கள் பாதிக்கப்படாமல், பலமாக காற்று வீசும் என்றும் அர்த்தம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications