பழைய குற்றாலத்தில் வெள்ளம்! காப்பாற்ற துடித்த பெண்! புயல் வேகத்தில் ஓடிய போலீஸ்! வெளியான புதிய வீடியோ
சென்னை: பழைய குற்றாலத்தில் கடந்த 17 ஆம் தேதி திடீர் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்ட நிலையில் வீடியோ எடுத்த தந்தையிடம் டாடி காப்பாற்றுங்க என இளம் பெண் கதறியதும் போலீஸ்காரர் புயல் வேகத்தில் ஓடுவதுமாக புதிய வீடியோ வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். அப்போது ஒருவர் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.

உடனே ஒரு பெண் பதறியபடியே, டாடி வீடியோ எடுக்காதீங்க, காப்பாற்றுங்க என்றார். தனது தந்தை காப்பாற்ற செல்ல தாமதித்த நிலையில் அந்த பெண்ணோ காப்பாற்ற முன்னோக்கி சென்றார். அப்போது அவர் " நீ போய் என்னம்மா செய்ய போகிறாய்" என கேட்டார், இந்த சூழலில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு போலீஸ்காரர் புயல் வேகத்தில் ஓடி சென்றார். கடந்த 17ஆம் தேதி பழைய குற்றாலத்தில் என்ன நடந்தது என்பது குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கோடை விடுமுறை என்பதால் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருந்தது. கடந்த 20ஆம் தேதி வரை தென்காசி, தேனி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதனால் புதிய குற்றாலத்தில் குளிப்பதற்கு கடந்த 17ஆம் தேதி தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் அங்கிருந்து 5 கி.மீ. தூரம் பயணம் செய்து பழைய குற்றால அருவிகளுக்கு மக்கள் வந்தனர். அங்கு ஆர்ப்பரிக்கும் நீரில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் தண்ணீர் பெருக்கெடுத்து படிக்கட்டுகளைத்தாண்டி ஓடி வந்தது. தண்ணீர் அதிகரித்ததும் அங்கிருந்தோர் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தனர். இதில் தண்ணீர் விழுந்த ஃபோர்ஸில் அங்கு குளித்துக் கொண்டிருந்த நெல்லையை சேர்ந்த 16 வயது சிறுவன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
இதையடுத்து அந்த சிறுவனை தேடும் பணிகளை தீயணைப்பு துறையினர் மேற்கொண்டனர். சிறிது நேரத்தில் நீரின் வரத்து குறைந்ததை அடுத்து அரை கி.மீ. தூரத்தில் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது. இந்த நிலையில் சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்படும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் சிறுவன் வெள்ளத்தில் படுத்தபடியே மிதந்து வந்தார்.
ஆனால் தண்ணீரின் வரத்து அதிகபடியாக இருந்ததால் அவரை காப்பாற்ற முடியாமல் போனது. வீடியோவில் அந்த சிறுவன் உருண்டு பிரண்டபடி வருவதை பார்க்கும் போது மனம் பதைபதைத்தது. பழைய குற்றாலத்தில் இது போன்ற வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் சுற்றுலா பயணிகளே உஷாராகி குளிக்காமல் வந்துவிடுவார்களாம்.
பழைய குற்றாலத்தில் ஒரு பெரிய பள்ளம் இருக்கிறது. இதனால் வெள்ளம் வந்தால் அடிக்கும் ஃபோர்ஸில் நேராக பள்ளத்தில்தான் விழுவார்கள். பழைய குற்றாலத்தில் சிறுவன் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் குற்றாலத்தை வனத்துறை பாதுகாப்பில் எடுத்துக் கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications