வேலூர் + 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! இடி மின்னலுடன் கொட்டப்போகும் கனமழை! வானிலை மையம் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கையை கொடுத்திருக்கிறது.
தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில்தான் வெயில் அதிகரிக்கும். ஆனால், இந்த முறை பிப்ரவரி இறுதியிலேயே வெயில் வாட்ட தொடங்கி விட்டது. கடந்த ஆண்டு பருவமழை ஓரளவு கை கொடுத்தாலும், இந்த ஆண்டின் கோடை காலம் வறட்சியை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மழை குறித்து மஞ்சள் அலர்ட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் வெயிலின் தீவிரம் குறையவில்லை.
நேற்று மட்டும் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 42.5° செல்சியஸ் வெயில் பதிவானது. அடுத்தபடியாக ஈரோட்டில் 42.2° செல்சியஸ், திருப்பத்தூரில் 41.8° செல்சியஸ், வேலூரில் 41.6° செல்சியஸ், திருச்சியில் (விமான நிலையம்) 41.3° செல்சியஸ், சேலத்தில் 40.8° செல்சியஸ், மதுரையில் (விமான நிலையம்) 40.6° செல்சியஸ், தர்மபுரி, மதுரை (நகரம்) & திருத்தணியில் 40.1° செல்சியஸ், நாமக்கல் & தஞ்சாவூரில் 40.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அதேபோல அடுத்த 3 தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும், அடுத்த ஏழு நாட்களை பொறுத்த அளவில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மே.3ம் தேதி தொடங்கி 5ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே.6 மற்றும் 7ம் தேதிகளில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்த அளவில், இன்று தொடங்கி மே.3ம் தேதி வரை அடுத்த 3 தினங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். இதே மே.4 மற்றும் 5ம் தேதியில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை குறையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது இரவு 7 மணி வரை வட மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பால் வட மாவட்ட மக்கள் மகிழச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications