தமிழ்நாட்டிற்கு நாளையும் ஆரஞ்சு அலெர்ட் .. மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு
சென்னை: தமிழ்நாட்டிற்கு நாளையும் ஆரஞ்சு அலெர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளையும் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.. கனமழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி, தமிழகத்தில் 7 இடங்களில் மிக கனமழையும், 31 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் 17 செ.மீ மழை பதிவாகி உள்ளது. இன்று காலை முதல் சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னை மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதியிலும் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு இன்று மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலெர்ட் கொடுக்கப்பட்ட நிலையில், நாளையும் ஆரஞ்சு அலெர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளையும் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில், இன்று (நவ.14) காலை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியது. அந்தமான்-நிகோபார் தீவுகளில் நிலை கொண்டு இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று மாலை தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. இது நாளை காலை மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
அதன்பிறகு, இது வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 16ம் தேதி ஆந்திரப் பிரதேச கடற்கரையில் மேற்கு மத்திய வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். பின்னர், அது வடக்கு-வடகிழக்கு திசையில் மீண்டும் வளைந்து நவம்பர் 17 அன்று ஒடிசா கடற்கரையில் வடமேற்கு வங்க கடலை அடையும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவைக்க ஆரஞ்சு அலெர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியா வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. இதேபோல் கடலோர ஆந்திரா மற்றும் ஏனாமிலும் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. ஆந்திரா, ஏனம், ராயலசீமா, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா மகேவில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.
ஒடிசாவை ஒட்டிய வடமேற்கு வங்க கடலில் மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்தில் புயல் காற்று வீசும். இடையிடையே 65 கிமீ வேகம் வரை புயல் காற்று வீசும்.தமிழகத்தை ஒட்டிய வங்க கடலில் மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்தில் புயல் காற்று வீசும். இடையிடையே 55 கிமீ வேகம் வரை புயல் காற்று வீசும். இதனால் வங்க கடலில் நாளை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது" இவ்வாறு இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது..
இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை. கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications