ஆரஞ்சு அலர்ட்: தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் அப்டேட்
சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாளை கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை காலத்தின் முதல் புயல் சின்னம் வரும் அக்டோபர் 22 ஆம் தேதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் அக்டோபர் 22 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை காலத்தின் முதல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி, அடுத்த 2 நாட்களில் தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வுத்துறை வெளியிட்ட நீண்ட கால வானிலை கணிப்பின் அடிப்படையில் வரும் வட கிழக்கு பருவ மழை காலத்தில் (அக்டோபர் - டிசம்பர் 2025) தமிழகத்தில் தென்கோடி பகுதிகளைத் தவிர்த்து அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பொதுவாக இயல்பு (440 மி.மீ) இயல்பிலிருந்து சற்று அதிகமான (சுமார் 500 மி.மீ) மழைக்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன.
தமிழக தென்கோடி பகுதிகளில் பொதுவாக வடகிழக்கு பருவமழை இயல்பிலிருந்து சற்று குறைவாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, நாளை (அக்டோபர் 10) தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். அந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் (அக்டோபர் 11) நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை முன்னறிவிப்பு
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தமிழக கடலோரப்பகுதிகள்
அக்டோபர் 10 ஆம் தேதி தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35-45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்
அக்டோபர் 10 ஆம் தேதி மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு அரபிக்கடல் பகுதிகள், கர்நாடகா-கேரளா கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35-45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும், என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications