ஷாப்பிங் போன மக்களே கவனம்.. இரவு 7 மணி வரை சென்னை+22 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
சென்னை: மக்கள் அனைவரும் தீபாவளி கொண்டாட்டங்களில் இருக்கும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, மதுரை உட்பட 23 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இயல்பை விட அதிக அளவு பருவமழை பொழிந்திருக்கிறது. குறிப்பாக கடந்த ஜூலை மாதம் தொடங்கி, செப்டம்பர் இறுதியில் முடிவடைந்த தென்மேற்கு பருவமழையானது, கேவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் போதுமான அளவுக்கு பெய்திருந்தது. ஆனால், சென்னை தொடங்கி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை போதுமான அளவுக்கு பெய்யவில்லை.

இப்படி இருக்கையில் அக்.1ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்த மழை வட மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடித்து பெய்தது. இப்போதுவரை இயல்பை விட 28% அதிக அளவில் மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக இன்று சென்னை அண்ணா நகரில் 10 செ.மீ வரை மழை பெய்துள்ளது. அதேபோல நியூ மணலி டவுன், கொளத்தூர், பெரம்பூர், அமைந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் 6 செ.மீ மழை (60 மி.மீ) பதிவாகியுள்ளது.
தீபாவளியான நாளை சென்னை, மதுரை உள்ளிட்ட மழை பெய்யுமா? என்கிற அச்சம் மக்களிடையே எழுந்திருக்கிறது. மறுபுறம், நாளை தீபாவளிக்காக இன்று மக்கள் பெரும் கூட்டமாக ஷாப்பிங் சென்றுள்ளனர். இப்படி இருக்கையில் இரவு 7 மணிவரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தருமபுரி, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட 23 மாவட்டங்களுக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை கொடுத்திருக்கிறது. முன்னதாக இன்று வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில்,
"நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், மதுரை, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தரும்புரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நவ.1ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நவ.2ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
3ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
4ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 05.11.2024: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications