வெள்ளத்தில் காரோடு சிக்கிக்கொண்ட இளைஞர்.. அமைச்சர் TRB ராஜா மெசேஜ்.. களமிறங்கி மீட்ட சென்னை போலீஸ்!
சென்னை: சென்னை வெள்ளத்தில், காருடன் சிக்கிக்கொண்ட இளைஞர், சமூக வலைதளத்தில் உதவி கேட்டு பதிவிட, அமைச்சர் டிஆர்பி ராஜா உடனடியாக தொடர்புகொண்டு பேசியுள்ளார். மேலும், சென்னை மாநகர காவல்துறை, மீட்பு பணிகளை தீவிரப்படுத்தி, அரை மணி நேரத்திலேயே கார் மற்றும் அதில் இருந்தவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
மிக்ஜாம் புயல் சென்னைக்கு கிழக்கு, வட கிழக்கு 110 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மணிக்கு 10 கி.மீ வேகத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று முற்பகல் தீவிரப் புயலாக வலுப்பெற உள்ளது. இது வடதமிழகம், தெற்கு ஆந்திராவுக்கு இடையே நகர்ந்து நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே நாளை கரையைக் கடக்கும். இதனால் இன்று இரவு வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை, பலத்த காற்று தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வெள்ளம்: புயல் கரையை கடந்துவிட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிக அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வரவேண்டாம் என சென்னை பெருநகர காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், கனமழை அல்லது இடியுடன் கூடிய மழையின்போது வெளியயே செல்வதை தவிர்க்கவும். கட்டாயம் பயணம் செய்ய வேண்டியிருந்தால், பொது போக்குவரத்து அல்லது நம்பகமான வாகனத்தைப் பயன்படுத்தவும். இடி, புயலின்போது எலக்ட்ரானிக் சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும் என சென்னை மாநகர காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

சென்னையில் விடிய விடிய பெய்த அதிகனமழை காரணமாக பல்வேறு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதிகபட்சமாக பெருங்குடியில் 29 செமீ மழை பதிவாகி உள்ளது. அடையாறுவில் 23.5 செ.மீ, மீனம்பாக்கத்தில் 23.15 செ.மீ, கோடம்பாக்கத்தில் 21.8 செ.மீ, வளரசவாக்கத்தில் 21.5 செ.மீ, சோழிங்கநல்லூரில் 21.36 செ.மீ மழை பதிவாகி உள்ளது. மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் ஏரிகள் நிரம்பியுள்ளதால், சென்னை நகர் முழுக்க வெள்ளம் சூழ்ந்துள்ளது.
The persons and the car has been brought to the safer place.
— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) December 4, 2023
காருடன் சிக்கிக்கொண்ட இளைஞர்: வேளச்சேரி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில், முதல் தளம் வரை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தரைத்தளத்தில் உள்ள வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளதால், மக்கள் வெளியேறியுள்ளனர். சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சக்திகுரு ராதாகிருஷ்ணன் என்பவர், எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைதளத்தில், தான் வெள்ளத்தில் காருடன் சிக்கி இருப்பதாகவும், தங்களைக் காப்பாற்றும்படியும் புகைப்படத்தைப் பதிவிட்டு உதவி கேட்டிருந்தார்.
Spoke to him ... He is safe 👍🏾
— Dr. T R B Rajaa (@TRBRajaa) December 4, 2023
பெரம்பூர் ஜமாலியா பகுதியில் தனது கார் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டதாகவும், கார் முழுக்க வெள்ள நீர் புகுந்ததையும், கார் நகராமல் வெள்ளத்தில் மாட்டிக் கொண்டதையும் தெரிவித்து, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, சென்னை மாநகராட்சி, சென்னை மாநகர காவல்துறை ஆகியோரின் சமூக வலைதள ஐ.டிகளை மென்ஷன் செய்து உதவி கேட்டிருந்தார்.
அமைச்சர் டிஆர்பி ராஜா: அவரது இந்த பதிவைத் தொடர்ந்து, அமைச்சர் டிஆர்பி ராஜா உடனடியாக தொடர்பு கொண்டு பேசி, அவருக்கு உதவி செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். தொடர்ந்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடமும் இதுகுறித்து தெரிவித்துள்ளார். உடனடியாக, சென்னை மாநகர காவல்துறை இந்த விஷயத்தை கவனத்தில் எடுத்து, பயப்பட வேண்டாம், எங்கள் டீம் உங்களுக்கு உதவும் என காரோடு மாட்டிக்கொண்ட இளைஞருக்கு தெரிவித்தது.
சென்னை காவல்துறை உடனடி மீட்புப்பணி: இதையடுத்து, அந்த இளைஞரையும், காரையும் மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த தகவலை சென்னை மாநகர காவல்துறை எக்ஸ் தளத்தில் வெளியிட்டது. தொடர்ந்து, பாதிக்கப்பட்ட இளைஞரும், தனக்கு தக்க நேரத்தில் கிடைத்த உதவியால், பாதுகாப்பாக உள்ளதாகத் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். உதவி கேட்ட சில நிமிடங்களிலேயே அமைச்சர், மாநகராட்சி, மாநகர காவல்துறை என உடனடியாக களமிறங்கி பணியாற்றியது, அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications