No Entry for Marina: ஆளைத் தள்ளும் காற்று! ஆளுயர அலைகள்! மெரினா செல்ல இன்றும் தடை நீட்டிப்பு
சென்னை: சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல இன்று இரண்டாவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டது. டிட்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையிலும் மெரினா கடற்கரைச் செல்ல தடை விதித்து போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் நேற்று இரவு வரை வலுவிழக்காமல் தமிழக கடலோர பகுதிகளுக்கு வந்தது. ஆனால் மேக கூட்டங்கள் இல்லாததால் மழையை கொடுக்க முடியவில்லை. தற்போது இந்த புயல், ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுவிழந்தது.

இது இன்று பிற்பகல் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் புதுச்சேரிக்கு தென்கிழக்கே 90 கி.மீ. தொலைவிலும், கடலூர் , காரைக்காலுக்கு 90 கி.மீ. தொலைவிலும், வேதாரண்யத்திற்கு 180 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 140 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.
டிட்வா புயல் கரையை கடக்காமல் கடலோர பகுதிகள் வழியாக சென்று வலுவிழந்தாலும் சென்னை அல்லது நெல்லூர் அருகே தாழ்வு மண்டலமாகவோ தாழ்வு பகுதியாகவோ நிலை கொள்ள வாய்ப்புள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
டிட்வா புயல், புயலாகவே தமிழக கடற்கரைக்கு வந்ததால் நேற்று காலை முதலே பட்டினம்பாக்கம், மெரினா, நீலாங்கரை, திருவான்மியூர், காசிமேடு, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடற்கரைகள் கொந்தளித்தன.
இங்கெல்லாம் கடல் அலைகள் ஆக்ரோஷமாக இருந்தது. பல அடி உயரத்திற்கு எழும்பின. இரவு நேரங்களில் அதிக சப்தத்துடன் மிரட்டி வந்தன. அது போல் ஆளைத் தள்ளும் அளவுக்கு காற்றும் வீசி வந்தது.
இதனால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க மெரினா உள்ளிட்ட கடற்கரைகளுக்கு பொதுமக்கள் யாரும் செல்லக் கூடாது என தடை விதிக்கப்பட்டது. அப்படியும் மெரினாவுக்கு செல்ல மாற்று பாதை மூலம் பொதுமக்கள் உள்ளே வந்து புகைப்படங்களையும் ரீல்ஸ்களையும் எடுத்து வந்தனர்.
அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர். எனினும் அவர்கள் அப்படி போனதும், இவர்கள் இந்த பக்கமாக நுழைந்து ஆர்ப்பரிக்கும் அலைகளில் குளித்து ஆபத்தை விலை கொடுத்து வாங்க முயன்றனர்.
இதையடுத்து டிட்வா புயலால் எதிர்பார்த்த அளவுக்கு மழை கிடைக்கவில்லை. இந்த நிலையில் மெரினா கடற்கரைக்குச் செல்ல இன்று இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டது. இன்று மழை இல்லாவிட்டாலும் காற்றழுத்தமாகவே சென்னைக்கு 90 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் நிலை கொண்டிருப்பதால் காற்று அதிகம் வீசுகிறது. இதனால் இன்றும் இந்த தடை நீடிக்கிறது.












Click it and Unblock the Notifications