ஸ்ரீவைகுண்டத்தில் ஏதோ நீட்டமா வெள்ளத்துல மிதக்குதேனு பார்த்தா.. ரயில் தண்டவாளத்தோட அடிப்பகுதி!
நெல்லை: திருநெல்வேலி - திருச்செந்தூர் வழித்தடத்தில் ஸ்ரீவைகுண்டம் - செய்துங்கநல்லூர் இடையேயான தண்டவாளத்தில் அடிப்பகுதி முழுவதும் நீரில் அடித்துச் சென்றுவிட்ட பிரத்யேக புகைப்படம் நமக்கு கிடைத்துள்ளது.
தென் தமிழகத்தில் சில இடங்களில் வானம் பார்த்த பூமி என சொல்லப்படுகிறது. அப்படியென்றால் மழையானது அரிதாகும். இந்த நிலையில் இந்த மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ள நீர் சூழ்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் அங்கிருக்கும் நீரோடைகள், கன்மாய்கள், கால்வாய்கள் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்துவிட்டன. பல இடங்களில் 30 ஆண்டுகளுக்கு மேல் இதுவரை பெய்யாத மழை பெய்ததால் தண்ணீரே வராத பகுதிகளில் கூட தண்ணீர் வந்துவிட்டதாக மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் ஆங்காங்கே ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் நாகர்கோவில் ரயில் திருவனந்தபுரம் வழியாக இயக்கப்படுகிறது. அது போல் விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருநெல்வேலி- திருச்செந்தூர் வழித்தடத்தில் ஸ்ரீவைகுண்டம்- செய்துங்கநல்லூர் இடையே தண்டவாளத்தில் அடிப்பகுதி முழுவதுமாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் 56036 என்ற எண் கொண்ட ரயில் இயக்கப்படுகிறது. இது 61 கி.மீ. தூரம் கொண்டது. இந்த வழித்தடத்தில் 12 நிறுத்தங்கள் உள்ளன. திருநெல்வேலி, பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், தட்டாங்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, நசரத், கச்சான்விளை, குறும்பூர், ஆறுமுகனேரி, காயல்பட்டினம், திருச்செந்தூர் ஆகியவை ஆகும்.
இந்த ரயில் தண்டவாளத்தின் பகுதி அடித்து செல்லப்பட்டுள்ளதால் ரயில் போக்குவரத்து கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் ரயில் மூலம் இந்த 12 இடங்களுக்கு செல்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. அரசு பேருந்துகளும் வெள்ள நீரோட்டத்தை பார்த்து இயக்கப்படுகின்றன. அது போல் மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை முடங்கியுள்ளது. இங்கு எப்போதும் வென்றான் நீர்த்தேக்கத்திலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வழியாக வரும் வாகனங்கள் எட்டயபுரத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு நேற்று சென்ற பக்தர்கள் அங்கு செல்லும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கால் சிக்கினர். இதையடுத்து அவர்கள் 20 பேரை பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டெடுத்தனர். வரலாறு காணாத மழை வெள்ளத்தால் தென் மாவட்டங்கள் ஆட்டம் கண்டுள்ளன.












Click it and Unblock the Notifications