தமிழகத்தில் இன்று மழை பெய்யும்.. உள் மாவட்டங்களில் புழுக்கம் அதிகரிக்கும்.. வானிலை மையம் அலர்ட்!
சென்னை: தென் தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னரே கோடை வெயில் சதமடித்து வரும் நிலையில், உள் தமிழக மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் மேலும் 2-3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில பகுதிகளில் அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிலவும். இதனால் பொதுமக்கள் கடும் புழுக்கத்தையும், உடல் ரீதியான அசௌகரியங்களையும் சந்திக்க நேரிடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு நாளில் தமிழகத்தின் அதிகபட்ச வெப்பநிலையாக வேலூரில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது.
வெப்பம் ஒருபுறம் வாட்டினாலும், வளிமண்டல சுழற்சி காரணமாக சில பகுதிகளில் மழைக்கும் வாய்ப்புள்ளது. ஏப்ரல் 24 - 27: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏப்ரல் 28: இதே பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
ஏப்ரல் 29 - 30: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் வரும் 28 ஆம் தேதி வரை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. வரும் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
அதேசமயம், தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்றும் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருப்பதால் கடலோர தமிழகத்தில் அசௌகரியம் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்பதால், மீனவர்கள் வழக்கம் போல் கடலுக்குச் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications