அடடா.. மறுபடியுமா? சென்னையில் பல இடங்களில் மழை.. வெள்ள பாதிப்பில் இருந்து மீள்வதற்குள் இப்படியா?
சென்னை: சென்னையில் மீண்டும் மழை பெய்து வருகிறது. வெள்ள பாதிப்புகளில் இருந்து சென்னை மீண்டு வரும் நிலையில் மீண்டும் மழை பெய்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் பெருவெள்ளம் ஏற்பட்டு சென்னையின் 450-க்கும் மேற்பட்ட பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதிகளில் வசித்த பொதுமக்கள் குடிநீர், உணவு, மின்சாரம் இன்றித் தவித்தனர். புயல் மழை காரணமாக 16 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. சென்னை மட்டுமல்லாது செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களையும் பந்தாடியுள்ளது புயல் மழை.

இன்னும் பல பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் வடியவில்லை. மக்களுக்கு அரசு சார்பிலும், தன்னார்வலர்களும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். புயல் மழையால் பாதிக்கபட்ட மக்களுக்கு ரூ.6000 ரேஷன் கடைகள் வாயிலாக வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த ஒரு வார காலமாக, பள்ளி, கல்லூரிகள் செயல்படாமல் இருந்து வந்த நிலையில், மழைநீர் அகற்றப்பட்டு நாளை முதல் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் செயல்பட உள்ளன.
இந்நிலையில், சென்னையில் மீண்டும் மழை பெய்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மயிலாப்பூர், ராயப்பேட்டை, எம்.ஆர்.சி நகர், அடையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வெள்ள பாதிப்புகளில் இருந்து சென்னை மீண்டு வரும் நிலையில் மீண்டும் மழை பெய்து வருவதால், மழைநீர் மீண்டும் தேங்குமா என்ற கவலை சென்னை மக்களிடையே ஏற்பட்டுள்ளது. எனினும், கனமழைக்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, திருவாரூர், தஞ்சாவூர், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படியே, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.












Click it and Unblock the Notifications