ஒரு இன்ச் கூட நகர முடியல.. வளசரவாக்கம் டூ போரூர்.. திணறிய சென்னைவாசிகள்.. புறநகர்களில் கொட்டிய "மழை"
சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் உள்ள 1,441 நீர்நிலைகள் 100 சதவீதம் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. அத்துடன், சென்னையில் பெய்து வரும் மழையால், புறநகரில் பெரும் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், மாநிலத்திலுள்ள நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பிவருகின்றன.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் குடிநீர் ஆதாரங்களான நீர் நிலைகள் நிரம்பத் தொடங்கியுள்ளன.
சோழவரம்: இந்த வருடம் பருவமழை, தமிழ்நாட்டில் இயல்பை விட 35 விழுக்காடு அதிகமாக மழை பெய்ததால் முக்கிய ஏரிகள் ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டுமளவுக்கு நீர் நிரம்பி உள்ளன.. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான செம்பரம்பாக்கம், சோழவரம், புழல் மற்றும் பூண்டி நீர் தேக்கங்களில் போதுமான அளவுக்கு நீரின் கொள்ளளவு உள்ளது.
குறிப்பாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல், தேர்வாய் கண்டிகை ஆகிய ஏரிகளில் ஒட்டுமொத்தமாக 76 சதவீதத்திற்கும் அதிகமான நீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளில் இருந்து பெறப்படும் நீரால் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீர்நிலைகள்: இனி அடுத்தடுத்த நாட்களிலும் மழை நீடிக்கும் என்ற அறிவிப்புகளையும் வானிலை மையம் வெளியிட்டு வருகிறது. இதனால், தொடர்ந்து நீர் நிலைகள் நிரம்பியே காணப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய தினம்கூட, தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாகவும், இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், நாளை மறுநாள் அதாவது 29-ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 மணி நேர மழை: அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, இன்று காலையிலேயே செய்திகள் வெளியானது.. இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்ட துவங்கியது..
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை கொட்ட துவங்கியது.. குறிப்பாக, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, அண்ணாசாலை, மயிலாப்பூர் உள்பட உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர், வாகன ஓட்டிகள் சற்று அவதிக்குள்ளாகியுள்ளனர்.
புறநகர் பகுதி: அதேபோல, சென்னையின் புறநகர் பகுதிகளிலும், அதிக மழை பெய்ததால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.. அதிலும், போரூர், ஐயப்பன்தாங்கல், வளசரவாக்கம், ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விடாமல் கனமழை கொட்டியது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று மாலை தொடங்கிய மழை தொடர்ந்து 4 மணிநேரத்திற்கு மேலாக விட்டு விட்டு பெய்து வந்தது. இதனால், பல்வேறு இடங்களில் மின்சாரம் தடை ஏற்பட்டது.
வாகன ஓட்டிகள்: இந்நிலையில், இன்று அதிகாலை முதல் மழை கொஞ்ச நேரம் ஓய்ந்திருந்த நிலையில், மறுபடியும் சென்னையில் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது.. இதனால், சாலைகளில் நீர்ப்பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளானதுடன், வாகனங்களை தள்ளிக்கொண்டு சென்றார்கள்.. இந்த போட்டோக்கள் எல்லாம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications