மாலை 4 மணி வரை மழை விடாது போலயே.. கோவை டூ நெல்லை வரை வெளுத்து எடுக்கப் போகுது.. வானிலை மையம் அலர்ட்
சென்னை: தமிழகத்தில் நேற்று பரவலாக மழை பெய்த நிலையில் இன்றும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில் இன்று மாலை 4 மணி வரை கோவை முதல் நெல்லை வரை 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது.
வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் மழை பெய்துள்ளது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று மாலை 4 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

5 மாவட்டங்களில் மழை பெய்யும்
இது தொடர்பாக கூறப்பட்டிருப்பதாவது:- "தமிழகத்தில் இன்று மாலை 4 மணி வரை கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக இன்று மதியம் வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு
* தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், தெற்கு கொங்கன் வடக்கு கேரளா பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதனாலும், இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
* ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
24 ஆம் தேதி வரை
* 19-08-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
* 20-08-2025 மற்றும் 21-08-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
* 22-08-2025 மற்றும் 23-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
* 24-08-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் மழைக்கு சான்ஸ்
சென்னையில் இன்று (18-08-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் நாளை (19-08-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மழை அளவு செமீ:
* மேல் கூடலூர் (நீலகிரி), கூடலூர் பஜார் (நீலகிரி) தலா 14.
* சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), தேவாலா (நீலகிரி) தலா 9,
* சோலையார் (கோயம்புத்தூர்) 8,
* விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி) 8. அவலாஞ்சி (நீலகிரி), பார்வூட் (நீலகிரி), நாலுமுக்கு (திருநெல்வேலி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), நடுவட்டம் (நீலகிரி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), கிளன்மார்கன் (நீலகிரி), ஊத்து (திருநெல்வேலி) தலா 7.
* வால்பாறை PTO (கோயம்புத்தூர்), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), உபாசி TRF AWS (கோயம்புத்தூர்), தாலுகா அலுவலகம் திருப்பத்தூர் (திருப்பத்தூர்) தலா 6.
* காக்காச்சி (திருநெல்வேலி), சின்கோனா (கோயம்புத்தூர்), மாஞ்சோலை (திருநெல்வேலி), செருமுள்ளி (நீலகிரி) தலா 5,
* மேல் பவானி (நீலகிரி), மண்டலம் 07 அம்பத்தூர் (சென்னை) தலா 4.
* திருப்பத்தூர் AWS (திருப்பத்தூர்), பெனுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி), BASL வெங்கூர் (கள்ளக்குறிச்சி), அம்பத்தூர் (Rev) (திருவள்ளூர்), கலவை பொதுப்பணித்துறை (ராணிப்பேட்டை), செய்யூர் (செங்கல்பட்டு) மண்டலம் 07 அயப்பாக்கம் (சென்னை) 3 செமீ மழை பெய்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்: 18-08-2025 மற்றும் 19-08-2025: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
20-08-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications