குட்டி பிரேக்குக்கு பின்னர்.. சென்னையில் மீண்டும் வேகமெடுக்க தொடங்கிய மழை! வெதர்மேன் அலர்ட்!
சென்னை: டிட்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னைக்கு அருகே நிலை கொண்டிருக்கிறது. இது கடந்த 24 மணி நேரமாக தொடர் மழையை கொடுத்த நிலையில், இரவு மழைக்கு சிறிது நேரம் பிரேக் கொடுத்திருந்தது. இருப்பினும், தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது x பக்கத்தில், "பொதுவாக சாதாரணமாக உருவாகும் மேக கூட்டங்களை விட, சக்தி வாய்ந்த செங்குத்து வளர்ச்சி கொண்ட மேகங்கள் கடலில் உருவாகி வருகிறது. இவை இடி மின்னலுடன் கூடிய கனமழையை கொடுக்கும்.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னைக்கு அருகில் இருக்கும் வரை அது தொடர்ந்து கனமழையை கொடுத்துக் கொண்டே இருக்கும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்பது சுற்றியுள்ள ஈரப்பதத்துடன் கூடிய காற்றை மிக வேகமாக ஈர்க்கும் இயல்பு கொண்டது. இப்படி ஈர்க்கப்பட்ட மேகங்கள், மையப்பகுதியை அடைந்தவுடன் உடனடியாக மேலே சென்று பெரிய மேக கூட்டங்களை உருவாக்குகிறது.
இந்த செயல்முறைகள் எல்லாம் மிக வேகமாக நடப்பதால் முன் அறிகுறி இல்லாமல் திடீரென மழை பெய்யும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடல் பரப்பில் நிலை கொண்டிருக்கும் வரை இப்படி மழை பெய்து கொண்டே இருக்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.
கடந்த 13 மணி நேரத்தில் அதிகபட்சமாக எண்ணூர் பகுதியில் 19 செ.மீ அளவுக்கு மழை பதிவாகி இருக்கிறது. பாரிஸ் கார்னர், மணலி புதுநகர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் 16 செ.மீ அளவுக்கும், பேசின் பாலம், ஐஸ் ஹவுஸ், விம்கோ நகர் உள்ளிட்ட பகுதிகளில் 13 செ.மீ அளவுக்கும், வடபழனி, கத்திவாக்கம், காசிமேடு பகுதிகளில் 12 செ.மீ அளவுக்கும் மழை பதிவாகி இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications