விடிய விடிய மழையா? காலை 8 மணிக்கு எப்படியிருந்த ஓஎம்ஆர் சாலை.. 2 மணி நேரத்தில் இப்படி இருக்கே!
சென்னை: சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழையால் பழைய மகாபலிபுரம் சாலையில் தேங்கிய மழைநீர் சற்று நேரத்தில் வடிந்து போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோடை காலத்தில் தமிழகத்தில் வெப்பம் அதிகரித்ததாலும் கடலோர பகுதியான சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெப்பம் சற்று குறைவாகவே இருக்கும். ஆனால் இந்த ஆண்டு கடந்த மே மாதம் முதல் 16 ஆம் தேதி வரை வெயில் சுட்டெரித்தது.

கடந்த மே மாதம் வங்கக் கடலில் மோக்கா புயல் உருவானது, ஜூன் மாதத்தில் அரபிக் கடலில் பைபர்ஜாய் புயல் உருவானது. இவற்றின் தாக்கத்தால் கடலோர மாவட்டங்களில் உயர் வெப்பநிலை நிலவியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தென் மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியதும் வலுவான மேற்கு திசைக் காற்று தமிழகம் நோக்கி வீசி மழையை வரவழைக்கும்.
அதன்மூலம் கோடைக் கால வெப்பம் குறையத் தொடங்கும். ஆனால் அரபிக் கடலில் பைபர்ஜாய் புயலால் தென்மேற்கு பருவக்காற்றும் வலுவாக இல்லாததால் அது கரையை கடக்கும் வரை சென்னை, புறநகரில் வெயில் வாட்டி வதைத்தது. இரவு நேரங்களிலும் காற்று வீசாமல் பொதுமக்கள் புழுக்கத்தில் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை முதலே வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து இருந்தது. காலை முதலே லேசான மழை பெய்யத் தொடங்கியது. ஜூன் மாதத்தில் மழையா என ஆச்சரியப்படும் அளவுக்கு நேற்று நள்ளிரவு சென்னையில் பல இடங்களில் மழை கொட்டித் தீர்த்தது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் இந்த மழை பெய்து வருவதாக தெரிவிக்கிறார்கள்.
இதனால் சாலையில் மழை வெள்ளம் தேஙகியது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. கிண்டி, வேளச்சேரி, வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. சென்னை ஓஎம்ஆர் சாலையில் கனமழை கொட்டியது. இதனால் சாலையில் வெள்ளம் போல் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மேடு , பள்ளம் தெரியாமல் தத்தளித்தனர். இநத நிலையில் சிறிது நேரத்திற்கெல்லாம் பழைய மகாபலிபுரம் சாலையில் தேங்கியிருந்த மழை நீர் அப்படியே வடிந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் கனமழை காரணமாக பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டன. இந்த நிலையில் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications