சென்னையில் விடிய விடிய கனமழை.. 4 மாவட்டங்களில் இன்றும் மழை தொடருமாம்.. மக்களே அலர்ட்
சென்னை: சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய மழை விட்டு விட்டு பெய்தது. நந்தனம், அண்ணா பல்கலைக்கழகம், நுங்கம்பாக்கம், தரமணி, மாமல்லபுரம், என பல்வேறு இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக நந்தனத்தில் 4.செமீ அளவு மழை பெய்துள்ளது. இன்றும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் கடந்த 6, 7 ஆம் தேதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று சென்னை வானிலை மையம் முதலில் கூறியிருந்தது. ஆனால் அப்போது காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகாமல் தள்ளிப்போனது. பின்னர் 8, 9 ஆம் தேதிகளில் உருவாகும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் 2வது முறையாக தள்ளிப்போனது. தொடர்ந்து 10 ஆம் தேதி உருவாகும் என்று வானிலை மையம் கணித்தது.

3வது முறையாகவும் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகாமல் தள்ளிப்போனது. இந்த நிலையில் 11 ஆம் தேதி இரவு அல்லது 12 ஆம் தேதிக்குள் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று கணிக்கப்பட்டது. குறிப்பிட்டது போலவே நேற்று இரவு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலையில் தமிழகம் நோக்கி நகரக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியது. குறிப்பாக நேற்று மாலையே சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மேகம் சூழ்ந்து மழை பெய்ய ஆரம்பித்தது. தொடர்ந்து இரவு சென்னையில் பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. சென்னை நுங்கம்பாக்கம், நந்தனம், தரமணி, பல்லாவரம், மீனம்பாக்கம், கிண்டி, வடபழனி, கோடம்பாக்கம், சேப்பாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய விட்டு விட்டு மழை பெய்தது. சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி, பூந்தமல்லி, அம்பத்தூர், திருவேற்காடு, பட்டாபிராம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடானது.
அதிகபட்சமாக சென்னை நந்தனத்தில் 4.4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 4.4 செ.மீ மழையும், தரமணி மற்றும் மீனம்பாக்கத்தில் தலா 4 செ.மீ மழையும், பள்ளிக்கரணையில் 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் இன்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே அடுத்த 3 மணி நேர அப்டேட் வெளியிட்ட வானிலை மையம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களி மழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 10 மணி வரை மேற்கண்ட 4 மாவட்டங்களிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை தொடர வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications