சென்னையில் இன்றும் இடி, மின்னலுடன் மழை தொடரும்.. 9 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்.. வானிலை மையம்
சென்னை: சென்னையில் இன்றும் மிதமான மழை தொடரும் என்றும், தமிழகத்தில் வரும் 12 ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று விழுப்புரம், தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் வரும் 12 ஆம் தேதி வரை ஒருசில இடங்களில் மழை தொடரும். குறிப்பாக இன்று தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளைக்கும் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்தவரை இன்னும் 2 நாட்களுக்கு மழை தொடரும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று நகரின் ஒருசில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். மத்திய, தெற்கு வங்கக்கடல், வடகிழக்கு, தென்மேற்கு வங்கக்கடலில் 55 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசும். மத்திய அரபிக்கடல், மத்திய மேற்கு, மத்திய கிழக்கு, அரப்பிக்கடலில் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications