ஸ்கூல், ஆபீஸ் கிளம்ப விடாம காலையிலேயேவா? சென்னையில் கொட்டும் மழை.. அடுத்த 3 மணி நேரத்துக்கு அலர்ட்!
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திண்டுக்கல், கரூர், சேலம் உள்பட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி போன்ற பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் சில பகுதிகளிலும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் ஆக. 22ஆம் தேதியான இன்று பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இன்று டெல்டா மாவட்டங்கள், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய,லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 78 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர், அரியலூர், திண்டுக்கல், கரூர், சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை சுற்றுவட்டாரத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக திருக்கழுகுன்றம், திருப்போரூர், பூந்தமல்லி, ஆலந்தூர், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications