நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. பள்ளிகளுக்கும் விடுமுறை.. உச்சபட்ட எச்சரிக்கையில் மாவட்ட நிர்வாகம்!
நீலகிரி: நீலகிரி மாவட்டத்திற்கு இன்றும், நாளையும் அதிகனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் வானிலை ஆய்வு மையம் தரப்பில் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கனமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகமும் தயார் நிலையில் உள்ளது.
கடந்த மே மாத இறுதியில் நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக பல இடங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்தும், மண் சரிவு ஏற்பட்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் அதிகனமழை பெய்யக்கூடும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
இந்த மழையின் போது எவ்வித அசம்பாவிதங்களும், பொருட்சேதமும் ஏற்படாத வகையில் அதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. வடக்கு கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
வானிலை ஆய்வு மையம் வார்னிங்
இதன் காரணமாக ஜூன் 19ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
கோவை மற்றும் நெல்லை மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழையும், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரெட் அலர்ட்
குறிப்பாக நீலகிரி மாவட்டத்திற்கு இன்றும், நாளையும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை சனிக்கிழமை என்பதால் வழக்கம் போல், அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் தனியார் பள்ளிகள் இயங்கும். ஆனால் தற்போது ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருப்பதால் தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவிக்கவேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலகம் உத்தரவு பிறப்பித்தது.
பள்ளிகளுக்கு விடுமுறை
இதுகுறித்த அறிவிப்பு நேற்று வெளியாகியது. இதனால் பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மழை பாதிப்புகளை எதிர்கொள்ள மாநில பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு, வருவாய், காவல் துறையினரும் தயார் நிலையில் உள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்புப்படை
அரக்கோணத்தில் இருந்து ஆய்வாளர் கோபிநாத் தலைமையிலான 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையும் வரவழைக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications