நிம்மதியா தூங்குங்க மக்களே! சென்னைவாசிகளுக்கு வந்த ஹாப்பி நியூஸ்.. ரெட் அலர்டை வாபஸ் பெற்றது மெட்!
சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட மக்களை மிரட்டி வந்த மழை சற்று ஓய்வு எடுக்க சென்றிருக்கிறது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு கொடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதே நேரத்தில் ஓரளவு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கணித்துள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. இதை அடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.

குறிப்பாக தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நேற்று முன்தினம் செய்யத் தொடங்கிய மழை நேற்று மாலை வரை வெளுத்து வாங்கியது. குறிப்பாக நேற்று மதியம் தொடங்கிய மழை மாலை 4 மணி வரை தொடர்ந்தது. இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் வெள்ளத்தால் தத்தளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. குறிப்பாக வேளச்சேரி, ஓஎம்ஆர் சாலை, சென்னை மாதவரம், செங்குன்றம் ஆகிய பகுதிகளில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
இதனையடுத்து தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில், மீட்பு பணிகளும் துரிதப்படுத்தப்பட்டது. தொடர்ந்து பல வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் மக்கள் வீடுகளை விட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு உணவு, குடிநீர், பால், பிஸ்கட் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் சென்னையில் மழை பெய்யவில்லை. இன்று காலையில் ஒரு சில இடங்களில் லேசான மழை மட்டுமே இருந்து நிலையில் பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் வடிந்தது.
இந்த நிலையில் இன்று மாலை வரை ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிக்கையில்,"நேற்று (15-10-2024) காலை தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை 05.30 மணி அளவில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று (16-10-2024) காலை 08.30 மணி அளவில், அதே பகுதிகளில், சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே சுமார் 320 கிலோமீட்டர் தொலைவிலும், புதுவைக்கு கிழக்கு- வடகிழக்கே சுமார் 350 கிலோமீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு தென்கிழக்கே சுமார் 400 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம்- தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் 17-ஆம் தேதி அதிகாலை கரையை கடக்கக்கூடும். இதன் காரணமாக இன்று 16.10.2024: வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். எங்கெங்கு கனமழை?: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒருசில கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யும்" என கூறப்பட்டிருந்தது.
இதனால் மக்கள் அச்சமடைந்த நிலையில் மழையும் பெய்யவில்லை. இதற்கிடையே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டு இருந்த ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications