ராமேஸ்வரத்தில் வரலாறு காணாத மழை! சூப்பர் மேகவெடிப்பு எப்படி ஏற்பட்டது? விளக்கும் ஆய்வாளர்கள்
ராமேஸ்வரம்: கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 44 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. சூப்பர் மேகவெடிப்பு எனும் நிகழ்வுதான் இந்த கனமழைக்கு காரணம் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பருவமழை தீவிரமடைவது இயல்புதான். அதேபோல இந்த ஆண்டும் கடந்த அக்டோபரில் தொடங்கிய பருவமழை தற்போது உச்சத்தை எட்டியிருக்கிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களை மழை பதம் பார்த்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 44 செ.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. 20 செ.மீ மழை பெய்தால் ரெட் அலர்ட் விடுக்கப்படும். அப்படியெனில் ராமேஸ்வரம் மிக மிக அதிகனமழையை எதிர்கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

இதற்கு சூப்பர் மேக வெடிப்பு நிகழ்வுதான் காரணம் என்று குறிப்பிடும் வானிலை ஆய்வாளர்கள், இந்த நிகழ்வு மிகவும் அரிதானது என்றும் கூறியுள்ளனர். வழக்கமாக மலை பிரதேசங்களில்தான் இப்படியான நிகழ்வுகள் நடக்கும். ஏனெனில் வளிமண்டலத்தில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு ஈரப்பதம் இருக்கும்போது, ஒரு சிறிய வளிமண்டல இடையூறு ஏற்படும். அதாவது மலைகள் மீது காற்று வேகமாக மோதி மேலெழும். இது ஏற்கெனவே பலவீனமாக உள்ள மேக கூட்டத்தை பாதித்து மழையாக பொழியும்.
வெப்பமான ஈரப்பதம் மிக்க காற்று உயரத்தில் செல்லும் போது அது மேகங்களாக உருவாகிறது. இந்த மேக கூட்டத்தின் அமைப்பு வலுவாக இருக்கும்பட்சத்தில் புதிய மேகங்கள் உருவாகி தொடர்ந்து வெவ்வேறு பகுதிகளுக்கு பயணிக்கும். ஆனால் இந்த மேக அமைப்பு பலவீனமாக இருக்கும்பட்சத்தில் அது எங்கு உருவாகிறதோ அந்த பகுதிக்கு நெருக்கமான இடத்திலேயே மழையாக பொழிந்துவிடும். இதைத்தான் மேக வெடிப்பு என்கிறார்கள். ஆனால், மேக கூட்டங்கள் வலுவாக இருந்து பெரும் மழையாக பொழிந்தால் அதை சூப்பர் மேக வெடிப்பு என்று குறிப்பிடுகிறார்கள்.
ஆய்வாளர்கள் சொல்வதை வைத்து பார்க்கும்போது மேக வெடிப்புக்கு மலை முக்கியமான காரணியாக இருக்கிறது. ஆனால் நேற்று மேக வெடிப்பு ஏற்பட்ட ராமேஸ்வரத்தில் மலைகளே கிடையாது. அப்படியெனில் மேக வெடிப்பு எப்படி சாத்தியமாகி இருக்கும் என்று கேள்வி எழுகிறது. இதற்கும் ஆய்வாளர்கள் பதில் அளித்துள்ளனர்.
அதாவது, காலநிலை மாற்றத்தால் சமவெளி பகுதிகளிலும் மேக வெடிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளனர். காலநிலை மாற்றம் வளிமண்டலத்தின் ஈரப்பதத்தை இயல்பாகவே அதிகரித்து விடுகிறது. இப்போது இந்த அமைப்பில் லேசான குறுக்கீடு செய்தால் போதும் அனைத்து மேகங்களும் மழையாக பூமியை நோக்கி வந்துவிடும். மட்டுமல்லாது இதை முன்கூட்டியே கணிப்பது மிகவும் கடினம் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
ராமேஸ்வரத்திலும் நேற்று இதுதான் நடந்திருக்கிறது. முன்கூட்டியே கணிக்க முடியாததால் மக்களுக்கு உரிய நேரத்தில் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications