பெங்களூரில் தரமான சம்பவம் இருக்கு.. அதி கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்! நாளை பள்ளிகளுக்கு லீவ்
பெங்களூர்: பெங்களூரில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பெங்களூர் நகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இந்த நிலையில் நாளையும் பெங்களூருக்கு அதிகனமழைக்கான் ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை காலம் நிறைவடைந்துவிட்டது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த முறை தொடக்கத்திலேயே மழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக நேற்று மாலையில் இருந்து இரவு வரை கனமழை கொட்டி தீர்த்தது.

இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. முட்டளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரின் வடக்குப் பகுதியில் உள்ள தொட்டபொம்மசந்திரா ஏரி 17 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. ஹெப்பால் அருகே உள்ள டாடா நகர் போன்ற தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
பல இடங்களில் மக்கள் படகு மூலமாக மீட்கப்பட்டனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பெங்களூரின் யெலஹங்காவில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை சுமார் 157 மிமீ மழை பெய்துள்ளது. பெங்களூரில் நாளையும் அதிகனழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள அதே சமயம் கல்லூரிகள் நாளை வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தென் உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் நாளை முதல் 26ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரகள் மேற்கொண்டுள்ளனர்.
பெங்களூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கூறினார். இது தொடர்பாக டிகே சிவக்குமார் கூறுகையில், "பெங்களூருவில் கனமழை பெய்து பல பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது நிவாரண பணிகளை மேற்கொள்வது தான் முக்கியம். அந்த நிவாரண பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த 2 நாட்களாக அதிகாரிகள் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகிறார்கள்" என்றார். பெங்களூரில் வெள்ள மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. மழை தொடர்பான புகார்கள் மற்றும் உதவிகளுக்கு உதவி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளும் வகையில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 1533 என்ற இலவச எண்ணில் தொடர்புகொள்ளலாம்.












Click it and Unblock the Notifications