வெயில் உக்கிரம்.. திடீரென மயங்கி விழுந்த 50 மாணவ, மாணவிகள்.. பள்ளி திறப்பு ஒத்திவைப்பு.. பீகாரில்
சென்னை: கடும் வெப்பம் காரணமாக 50 மாணவ, மாணவிகள் மயங்கி விழுந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார்கள். பீகாரின் பெகுசராய் மற்றும் ஷேக்புராவில் இதுபோன்ற சம்பவங்கள் இன்று பதிவாகின. சுமார் 50 மாணவிகள் மயங்கி விழுந்துள்ளனர்.
இதையடுத்து முதல்வர் நிதிஷ்குமார், மே 30 முதல் ஜூன் 08 வரை பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளார். பள்ளிக் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு தலைமைச் செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் பல பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை 45 டிகிரி செல்சியஸை தாண்டியுள்ளது. டெல்லியில் கிட்டத்தட்ட 50 டிகிரி செல்சியஸ் பதிவாகியது. நூற்றாண்டு சாதனையை இது முறியடித்தது. ராஜஸ்தான், ஹரியானா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களிலும் கடும் வெப்பம் நிலவி வருகிறது.

பெகுசராய் மற்றும் ஷேக்புரா ஆகிய பகுதிகளில் வெப்பத்தின் காரணமாக சுமார் 50 பள்ளி மாணவிகள் மயங்கி விழுந்தனர். ஷேக்புராவில் ஒரு பள்ளியைச் சேர்ந்த 24 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடும் வெப்பம் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பீதியை ஏற்படுத்தியது.
பெகுசராய் மாதிஹானி மத்திய வித்தியாலயத்தில் 18 சிறுமிகள் வெப்பத்தால் மயங்கி விழுந்து மதிஹானி பரிந்துரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மின்விசிறிகள், ஜெனரேட்டர்கள் இருந்தும், மாணவர்களின் நிலை மிகவும் மோசமடைந்தது. தலைமை ஆசிரியர் ஓடிப்போய் ஓஆர்எஸ் எனப்படும் எனர்ஜி பானங்களை வழங்கினார், ஆனால் மயக்கம் தொடர்ந்துள்ளது.
தமிழகத்திலும் பள்ளித் திறப்பு தள்ளிப்போகுமா (Tamil Nadu school re open) என்ற எதிர்பார்ப்பை வெப்ப நிலை உயர்வு ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்விக்கு பள்ளிக் கல்வித்துறை இரு தினங்களுக்கு முன்பு பதிலளித்தது. ஆம்.. 2024ம் கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறப்பு ஜூன் 6ம் தேதி என்று அறிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications