நீலகிரியில் கொட்டி தீர்க்கும் கனமழை.. குன்னூரில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலையும் வழக்கம் போல கனமழை தீவிரம் எடுத்ததால், இன்று குன்னூர் தாலுகாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவு மழை பெய்திருக்கிறது. அக்.1ம் தேதி தொடங்கி நவ.3ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் மழை இயல்பை விட 19% அதிகமாக பெய்திருக்கிறது. இந்த நாட்களில் 253.1 மி.மீ மழை பெய்திருக்க வேண்டும். ஆனால், 301.1 மி.மீ மழை பெய்திருக்கிறது. எனவே ஊட்டி மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டிருக்கிறது. மேலும் சில இடங்களில் மண் சரிவு ஏற்படும் அபாயம் எழுந்திருக்கிறது.

நேற்று குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காந்திபுரம் பகுதியில் பாறைகள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. அதேபோல, குன்னூர் ராணுவ பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் குர்ஹா ஹில் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். எனவே, கனமழை காரணமாக மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் இன்று குன்னூர் தாலுகாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications