தமிழகத்தில் உக்கிரம் காட்டிய வெயில்.. இன்று மட்டும் 13 இடங்களில் சதம்! அதிகபட்சம் எங்கேன்னு பாருங்க
சென்னை: தமிழகத்தில் அரசியல் களம் அனல் ஒரு புறம் இருக்க வெயிலின் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெயில் உக்கிரம் காட்டியது. குறிப்பாக இன்று மட்டும் தமிழகத்தில் 13 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்றும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தாலும் பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் கொளுத்தி எடுத்தது. இதனால் மதிய நேரங்களில் வெளியில் செல்லவே மக்கள் அச்சப்படுகின்றன. வரும் 24 ஆம் தேதி வரை தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்களும் தெரிவித்து இருந்தனர்.

13 இடங்களில் வெயில் சதம்:
அதன்படி இன்றும் தமிழகத்தில் பல இடங்களில் வெயில் வெளுத்து வாங்கியது. குறிப்பாக இன்று தமிழகத்தில் 13 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்தது. அதன் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
* கரூர் (பரமத்தி) - 105.8 டிகிரி (41 செல்சியஸ்)
* வேலூர் - 104.72 டிகிரி (40.4 செல்சியஸ்)
* மதுரை விமானநிலையம் - 104.36 டிகிரி (40.2 செல்சியஸ்)
* திருச்சி - 104.18 டிகிரி (40.1 செல்சியஸ்)
* ஈரோடு - 104 டிகிரி (40 செல்சியஸ்)
* நாமக்கல் - 103.46 டிகிரி (39.7 செல்சியஸ்)
* மதுரை நகரம் - 102.92 டிகிரி (39.4 செல்சியஸ்)
* சேலம் - 102.92 டிகிரி (39.4 செல்சியஸ்)
* திருப்பத்தூர் - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)
* தர்மபுரி - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)
* கோவை - 101.48 டிகிரி (38.6 செல்சியஸ்)
* பாளையங்கோட்டை - 101.12 டிகிரி (38.4 செல்சியஸ்)
* திருத்தணி - 100.58 டிகிரி (38.1 செல்சியஸ்) என 13 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது.
ஒரு சில இடங்களில் மழை பெய்யும்
முன்னதாக வானிலை மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், வளைக்குடா வரை விதர்பா, மரத்வாடா, வடக்கு உள் கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் வரும் 21 ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகள் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
15-04-2026 முதல் 19-04-2026 வரை: உள் தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னையி எப்படி?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று (15-04-2026) மற்றும் நாளை (16-04-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். என்று வானிலை மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications