டேய் கலையலங்காரம்.. எல்லாத்தையும் மாத்துங்கடா.. ஏசி ரிமோட் எங்க தேடுங்கடா! மாயமான தென்மேற்கு பருவமழை
புனே: மே 29 முதல் தென்மேற்கு பருவமழை திடீரென கை விரித்த நிலையில், ஜூன் 12 முதல் 18 ஆம் தேதிக்குள் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. ஜூன் 12-13 தேதிகளில் வங்காள விரிகுடாவில் ஒரு புதிய தாழ்வு அமைப்பு உருவாகக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், கணிப்புகள் வேறுபடுவதால் சில நிச்சயமற்ற நிலையும் நீடிக்கிறது.
மே மாதம் இறுதியிலேயே தென்மேற்கு பருவமழை தொடங்கியதால், நம்மூர் மக்கள், அதுவும் மேற்கு மாவட்டங்களைச் சேந்தவர்கள், கிருஷ்ணகிரி, பெங்களூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஏசியை ஆப் செய்துவிட்டு கம்பளிக்கு தாவினர். ஆனால், கடந்த சில நாட்களாக வெயில் வாட்டுவதால் ஏசி ரிமோட்டை தேட ஆரம்பித்துள்ளனர். இப்படி மழை நின்றது விவசாயிகளிடையே பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

பருவமழை மீண்டும் தொடங்குமா?
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், "சில கணிப்புகள் ஒரு தாழ்வு அமைப்பு உருவாகும் என பரிந்துரைக்கின்றன, சில கணிப்புகள் அப்படி நடக்காது என்கின்றன. அதனால் உறுதியாக எதையும் இப்போது சொல்ல முடியாது" என்றார். இருப்பினும், ஒரு தாழ்வு அமைப்பு உருவானாலும், உருவாகாவிட்டாலும், குறிப்பிட்ட காலத்தில் பருவமழை மீண்டும் தொடங்கும் என்று நீண்ட கால வானிலை முன்னறிவிப்பு சுட்டிக்காட்டுகிறது.
பருவமழை மீண்டும் தொடங்கிய பிறகு, மத்திய இந்தியா, மகாராஷ்டிரா மற்றும் தென் தீபகற்ப இந்தியாவில் (பருவமழை ஏற்கனவே தொடங்கிய பகுதிகள்) பலத்த மழை பெய்யும் என்று IMD எதிர்பார்க்கிறது. வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்த முன்னறிவிப்பு நம்பிக்கையை தருகிறது.
ஜூன் 12 முதல் 18 வரையிலான வாரத்தில் தென்மேற்கு பருவமழை மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் மேலும் சில பகுதிகளுக்கு முன்னேறக்கூடும் என்று IMD-ன் நீண்ட காலத்திற்கான முன்னறிவிப்பு தெரிவிக்கிறது. மேற்கு கடற்கரையில் பலத்த காற்று வீசுவதால், தென் தீபகற்பம் மற்றும் அதை ஒட்டியுள்ள மத்திய இந்தியாவில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஜூன் 12-18 வரை தென் தீபகற்ப இந்தியாவில் இயல்பை விட அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், மத்திய இந்தியாவின் பல பகுதிகளில் இயல்பான மழை பெய்யும். அதே சமயம், வடமேற்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் இயல்பை விடக் குறைவான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் வானிலை முன்னறிவிப்பு நிறுவனமான ஸ்கைமெட் வெதர் சர்வீசஸ், வங்காள விரிகுடாவில் பருவமழை அமைப்பு உருவாகுவதில் அதிக நம்பிக்கை கொண்டுள்ளது. ஸ்கைமெட் தலைவர் ஜி.பி. சர்மா கூறுகையில், "ஜூன் 10 ஆம் தேதி மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவில் ஒரு சூறாவளி சுழற்சி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருங்கிணைப்புக்கு இன்னும் 24 மணி நேரம் ஆகும்" என்றார்.
மேலும் சர்மா கூறுகையில், "இந்த தாழ்வு அமைப்பு ஜூன் 11 முதல் கடலோரப் பகுதிகளில் வானிலை நடவடிக்கைகளை தூண்டி விடக்கூடும். இந்த வானிலை அமைப்பு அதன் வழக்கமான பாதையில் இருந்து சற்று தெற்கே நகர்ந்து ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா வழியாகச் செல்லக்கூடும்" என்றார். ஸ்கைமெட் கணிப்பின்படி, ஜூன் 12 முதல் 17 வரை பருவமழை மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளது. இது தென் தீபகற்ப இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை குளிர்விக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புகள் ஜூன் மாத மத்தியில் பருவமழை மீண்டும் தொடங்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. அதேநேரம், ஸ்கைமெட் வெதர் சர்வீசஸ் இதை இன்னும் உறுதியாக நம்புகிறது. இருப்பினும் இப்போது வெயில் வாட்டத் தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications