144 +2.. மிக்ஜாம் புயல் காரணமாக மொத்தம் 146 ரயில்கள் ரத்து! தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்கெனவே 144 ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 2 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 05.30 மணி அளவில் 'மிக்ஜாம்' புயலாக வலுப்பெற்றது. இது 11.30 சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலை கொள்ளும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நாளை(டிச.04) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் (ரெட் அலர்ட்), ஓரிரு இடங்களில் அதி கனமழையும், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர், திருப்பத்தூர் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நாளை சூறை காற்று வீசும் என்றும் ஆய்வு மையம் கூறியுள்ளது. அதாவது நாளை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோமீட்டர் வேகத்திலும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசும் என கூறியுள்ளது.
இதன் காரணமாக ஏற்கெனவே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக நாளை பொது விடுமுறையை அறிவித்திருக்கிறது. வங்கிகள், ஐடி மற்றும் நிதி நிறுவனங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. அதே நேரம், பொதுமக்கள் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இதனால் தெற்கு ரயில்வே சென்னை-கொல்கத்தா வழித்தடத்தில் செல்லும் பெரும்பாலான ரயில்களையும், மதுரை நிஜாமுதீன், சென்னை-அகமதாபாத், மதுரை-சண்டிகர் உள்ளிட்ட முக்கிய ரயில்கள் என 144 ரயில்களை ரத்து செய்வதாக அறிவித்தது. இதனை தொடர்ந்து தற்போது மேலும் இரண்டு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதாவது சென்னையிலிருந்து இரவு 11.45க்கு புவனேஸ்வர் செல்லும் வண்டி எண் 06073 எனும் வண்டியும், புவனேஸ்வர்-சென்னை (06074) வண்டியும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications