வெலவெலக்க வைத்த பெஞ்சல்! தண்டவாளத்தை பதம் பார்த்த வெள்ளம்! முக்கிய ரயில் சேவைகள் ரத்து.. லிஸ்ட் இதோ!
சென்னை: பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் காரணமாக விக்கிரவாண்டி விழுப்புரம் இடையே தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி இருப்பதால் சென்னை - நாகர்கோயில் வந்தே பாரத், தேஜாஸ் எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ஐந்து ரயில்களின் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பாண்டியன், சோழன் அதி விரைவு ரயில்களின் சேவையும் இன்று ஒரு நாள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நேற்று முன் தினம் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய “ஃபெஞ்சல்” புயல், மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழக - புதுவை கடற்கரையை, புதுச்சேரி அருகில் இரவு சுமார் 11 மணி அளவில், கரையைக் கடந்தது.

புயல் கரையைக் கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசியது. இதன் காரணமாக சென்னை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. தொடர்ந்து 11 மணிக்கு மேல் புயலின் முனைப்பகுதியும் அடுத்து மையப் பகுதியான கண் பகுதியும், இறுதியில் வால் பகுதியும் அடுத்தடுத்து கரையை கடந்தது.
இதனால் புதுச்சேரி விழுப்புரம், கடலூர் ஆகிய பகுதிகளில் சுமார் 60 முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசிய நிலையில் கனமழை கொட்டியது. இதன் காரணமாக புதுச்சேரி விழுப்புரம் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 8:30 மணி முதல் 5 30 மணி வரை புதுச்சேரியில் வரலாறு காணாத அளவுக்கு மழைப்பதிவு இருந்தது. புதுச்சேரி ஒயிட் டவுன், அண்ணா நகர், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் பல இடங்களில் தேங்கியது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கினர்.
இதேபோல கனமழை காரணமாக சென்னைக்கு சமமாக விழுப்புரத்திலும் கடும் பாதிப்பு ஏற்பட்டது. சுமார் 48 மணி நேரம் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் வெள்ளைக் காடாக மாறியது. பல இடங்களில் மின்கம்பங்கள் மரங்கள் முறிந்து விழுந்தன. மின்சாரம் தடைபட்டதால் நகரப் பகுதிகளும் கிராமப் பகுதிகளும் இருளில் மூழ்கியது. தற்போது விழுப்புரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. புயல் கரையை கடந்த பிறகும் மழை மற்றும் காற்றின் தாக்கம் குறையாமல் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது.
இந்த நிலையில் இன்று முக்கிய ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கனமழை காரணமாக விக்கிரவாண்டி முண்டியம்பாக்கம் இடையே ரயில் பாலத்தை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் விரைவு ரயில், மதுரை - சென்னை வைகை விரைவு ரயில், காரைக்குடி - சென்னை பல்லவன் விரைவு ரயில், சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் விரைவு ரயில், சென்னை - மதுரை தேஜாஸ் விரைவு ரயில், பல்லவன் அதிவிரைவு ரயில், சோழன் விரைவு ரயில் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் மதுரையில் இருந்து புறப்பட்ட பாண்டியன் எக்ஸ்பிரஸ் விழுப்புரத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதே போல சென்னை நோக்கி செல்லும் விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் எழும்பூரில் இருந்து விழுப்புரம் வழியாக இயக்கப்படும் ரயில் சேவைகளும் ரத்த செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications