சென்னையில் திடீரென வீசிய மண்வாசம்! இதை யாரும் எதிர்பார்க்கலையே.. சிலிர்த்த மக்கள்!
சென்னை: சென்னையில் திடீரென லேசான சாரல் மழை பெய்துள்ளது. பனி மூட்டம் இருந்து வந்த நிலையில் திடீரென பெய்த மழையால் மக்கள் குளிரில் சிலிர்த்துள்ளனர்.
சென்னையில் அண்ணாநகர், வில்லிவாக்கம், அயனாவரம், பாடி உள்ளிட்ட பகுதிகளில் திடீரென லேசான மழை பெய்தது. இது ஏற்கெனவே இருந்த குளிரை மேலும் அதிகரித்திருக்கிறது. மட்டுமல்லாது லேசான மண்வாசத்தையும் ஆங்காங்கே கிளப்பிவிட்டிருக்கிறது.

சென்னையை பொறுத்தவரை கடந்த 10 நாட்களாக மழை ஏதும் பெய்யவில்லை. ஆனால் கடந்த அக்டோபர் தொடங்கி டிசம்பர் இறுதிவரை சுமார் 60 செ.மீக்கும் அதிகமாக மழை பதிவாகியிருந்தது. இது இயல்பை விட 23% அதிகமாகும். சென்னை தவிர, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் மழை பதிவாகியிருந்தது.
மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்த அறிக்கையில், "நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய வளி மண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
எனவே இன்றும் நாளையும், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
ஜன.12ம் தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி, மின்னடலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
ஜன.13ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னடலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜன.14 தொடங்கி 16ம் தேதி வரை தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னடலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகள்: 10-01-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
11-01-2025 மற்றும் 12-01-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
13-01-2025 மற்றும் 14-01-2025: எச்சரிக்கை ஏதுமில்லை.
வங்கக்கடல் பகுதிகள்: 10-01-2025: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
11-01-2025 முதல் 14-01-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.
அரபிக்கடல் பகுதிகள்: 10-01-2025 முதல் 14-01-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை. மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என கூறியிருக்கிறது.












Click it and Unblock the Notifications